மீண்டும் கலக்கப்போகுது டபுள் டெக்கர் பஸ்.! இவ்வளவு வசதிகளா.? எந்த வழித்தடம்.? எப்போது தெரியுமா.?
Double-Decker Electric Bus: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில், புதிதாக டபுள் டெக்கர் மின்சார பேருந்து இயக்கப்படவுள்ளது.

டபுள் டெக்கர் மின்சார பேருந்து
சென்னையில் கலக்கி வந்தது டபுள் டெக்கர் அரசு பஸ், இந்த பேருந்தில் பயணிப்பதற்காகவே வெளியூர்களில் இருந்து ஏராளமான மக்கள் சென்னைக்கு சுற்றுலாவாக வந்து சென்றனர். இந்த டபுள் டெக்கர் பேருந்தே சென்னையில் மற்றொரு சுற்றுலா இடம் போல் மக்கள் பார்த்து பயணித்து வந்தனர். 1970ஆம் ஆண்டுகளில் டபுள் டெக்கர் பேருந்துகள் முதல் முதலில் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. தாம்பரம் முதல் உயர்நீதிமன்றம் வரை இந்த பேருந்து இயக்கப்பட்டு வந்தது. அடுத்தடுத்து மக்கள் வரவேற்பை பெற்று வந்தாலும், பராமரிப்பு செலவு அதிகம் என்பதால் 2008ஆம் ஆண்டு இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.
சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பஸ்
இந்த நிலையில் மீண்டும் சுமார் 18ஆண்டுகளுக்கு பிறகு டபுள் டெக்கர் பஸ் இயக்கப்படவுள்ளது. இதனால் தற்போதை இளைஞர்கள் டபுள் டெக்கர் பேருந்து சேவையை எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த பேருந்து சேவை இரண்டு முதல்கட்டமாக வழித்தடங்களில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தாம்பரம்- பிராட்வே வழித்தடத்திலும், அடையாறு முதல் மாமல்லபுரம் வரையும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வருகிறது. சென்னையில் பல இடங்களில் மெட்ரோ ரயில் பாலங்கள் சாலையிலும் செல்கிறது. எனவே இரட்டை அடுக்கு பேருந்து இயக்கும் போது ஏதேனும் பாதிப்பு வருமா என சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வெற்றிகரமாக டபுள் டெக்கர் பஸ் சோதனை முடிவடைந்துள்ளது.
எந்த வழித்தடத்தில் டபுள் டெக்கர் அரசு பஸ்
இதனையடுத்து முதல் கட்டமாக சென்னையில் டபுள் டெக்கர் பேருந்து இயக்குவதற்காக 20 மின்சார டபுள் டெக்கர் பேருந்துகளை வாங்க போக்குவரத்து கழகம் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மின்சார பேருந்துகள் சென்னை மட்டுமல்ல பல்வேறு நகரங்களில் இயங்கி வரும் நிலையில், ‘அசோக் லேலண்ட்’ நிறுவனத்திடம் இருந்து முதற்கட்டமாக 20 மின்சார இரண்டு அடுக்கு பேருந்துகளை வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. சென்னையின் பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) சுற்றுச்சூழல் பாதிப்பு குறைவான பேருந்துகளையும், அதிக திறன் கொண்ட போக்குவரத்துகளை இயக்க திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் வார இறுதி நாட்களில் மக்களின் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் இந்த இரட்டை அடுக்கு பேருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேருந்து சேவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேருந்து சேவை 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் சென்னையில் தனது பயணத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயன்கள் - சிறப்பம்சங்கள்
சாதாரண பேருந்தை விட 50 முதல் 100 % வரை அதிக பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். குறிப்பாக 80 முதல் 100 பயணிகள் ஒரே பேருந்தில் பயணிக்க முடியும். அதிக பயணிகளை ஒரே பேருந்தில் ஏற்றுவதால் சாலையில் பேருந்துகள் எண்ணிக்கை குறைகிறது, போக்குவரத்து நெரிசல் குறைய உதவுகிறது.
மின்சார பேருந்து இயக்கம் காரணமாக காற்று மாசு மற்றும் கார்பன் வெளியேற்றம் குறைகிறது. டீசல் பேருந்துகளை விட சுற்றுச்சூழலுக்கு மிகவும் சிறந்தது.
மின்சார பேருந்து டீசலை விட மலிவாக விலையில் இயக்கப்படுகிறது. பராமரிப்பு செலவு குறைவாகும்.





















