![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kudankulam Nuclear Waste: கூடங்குளம் அணு உலைக்கழிவு விவகாரம்.. மக்களின் நலனை கருத்தில்கொண்டு கைவிடுக - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்..
கூடங்குளம் அணு கழிவு விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதன் ஒன்றை எழுதியுள்ளார்.
![Kudankulam Nuclear Waste: கூடங்குளம் அணு உலைக்கழிவு விவகாரம்.. மக்களின் நலனை கருத்தில்கொண்டு கைவிடுக - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்.. Kudankulam Nuclear waste Issue: Tamilnadu CM MK Stalin writes letter to PM Modi to reconsider decision to set up Nuclear waste plant in kudankulam Kudankulam Nuclear Waste: கூடங்குளம் அணு உலைக்கழிவு விவகாரம்.. மக்களின் நலனை கருத்தில்கொண்டு கைவிடுக - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/18/067b676793d2a96354a62d15f192f0de_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தின்கீழ், அணு உலைகளிலிருந்து வெளியேறும் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக பொது மக்களிடையே உள்ள கவலையை மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் 1000 மெகாவாட் திறன் கொண்ட ஆறு அணுமின் உலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த ஆறு அலகுகளில், அலகுகள் 1 மற்றும் 2 ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளன. அலகுகள் 3 மற்றும் 4 கட்டுமானத்டில் உள்ளன. அலகுகள் 5 மற்றும் 6 இன்னும் நிறுவப்படவில்லை.
அந்த ஆறு அணுமின் உலைகளிலிருந்து உருவாகும் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை, அணுமின் நிலைய வளாகத்திற்குள்ளேயே, அணு உலைக்கு அப்பால் சேமித்து வைப்பதற்கான வசதிகளை அமைக்க இந்திய அணுமின் கழகம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அலகுகள் 1 மற்றும் 2க்கு அனுமதி அளித்தபோதே இரண்டு அலகுகளில் பயன்பாடு முடிந்த அணு எரிபொருளை சேமித்து ரஷ்யாவிற்கே திருப்பி அனுப்பிட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் தற்போது பயன்படுத்தப்பட்ட எரி பொருள் கழிவுகளை அணு உலைக்கு அப்பால் சேமித்து வைப்பதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவு மாநில அரசுடன் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்டது.
இந்த செயலால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் ஆபத்துகள் தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் உட்பட தமிழ்நாடு மக்களின் ஆழ்ந்த கவலையையும், அச்சத்தையும் பதிவு செய்திருந்தனர். தமிழ்நாடு மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை கைவிட வேண்டும். இந்த கழிவுகளை ரஷ்யாவிற்கு திருப்பி அனுப்ப முடியாத பட்சத்தில் மக்கள் வசிக்காத மற்றும் சூழலியல் அல்லாத பகுதிகளில் நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு அமைத்து இதை சேமிக்க வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள 8 கோடி மக்களின் சார்பாக இந்த வேண்டுகோளை நான் விடுக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)