விழுப்புரம் ரயில் நிலையத்தில் நகை திருட்டு நாடகம்! இன்சூரன்ஸ் மோசடி செய்த தம்பதி கைது... வெளியான அதிர்ச்சி தகவல்
ரயிலில் பயணம் செய்து பிரபலமான நகைகடையில் நகை எடுத்து திருடப்பட்டதாக பொய் புகார் அளித்து நூதன முறையில் இன்சூரன்ஸ் கிளைம் செய்து மோசடி செய்த தம்பதியை விழுப்புரம் ரயில்வே போலீசார் கைது செய்தனர்

விழுப்புரம் : ரயிலில் பயணம் செய்து பிரபலமான நகைகடையில் நகை எடுத்து திருடப்பட்டதாக பொய் புகார் அளித்து நூதன முறையில் இன்சூரன்ஸ் கிளைம் செய்து மோசடி செய்த தம்பதியை விழுப்புரம் ரயில்வே போலீசார் கைது செய்து 30 லட்சத்து 80 ஆயிரம் ரொக்க பணம் 140 கிரான் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.
நூதன முறையில் இன்சூரன்ஸ் கிளைம்
சென்னை, சைதாப்பேட்டையை சேர்ந்தவர் மகாலிங்கம், 51; ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ருக்மணி, 43. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். சந்தேகம் குடும்பத்துடன் திருவாரூரில் உறவினர் திருமணத்திற்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு, 11மணிக்கு, மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை திரும்பி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை, 2.30 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்திறங்கியவர்கள், தங்கள் பையில் வைத்திருந்த, 296 கிராம் தங்க நகைகள், கடலுார் அருகே வந்த போது மாயமானதாக அழுது புலம்பினர்.
140 கிராம் தங்க நகைகள் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்
விழுப்புரம் ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். விழுப்புரம் ரயில்வே போலீசார் விசாரணை செய்தனர். இவ்வளவு நகை களை ஏன் ரயிலில் எடுத்து வந்தனர் என, சந்தேகமடைந்த போலீசார், மகாலிங்கம் குடும்பத்தினரிடம் முறையாக விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், அவர்கள் தங்கியிருந்த ரயில்வே ஓய்வறையில் சோதனையிட்ட போலீசார், அவர்களின் பையில் மறைத்து வைத்திருந்த, 140 கிராம் தங்க நகைகள் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நகை தொலைந்து விட்டதாக மோசடி
அவர்களிடம் நடத்திய விசாரணையில், நகை தொலைந்து விட்டதாக மோசடி செய்து, இன்சூரன்ஸ் தொகை பெறும் நோக்கில் நாடகம் ஆடியது தெரிந்தது. இவர்கள், கடந்த மாதம் 21ம் தேதி , சென்னையில் பிரபல தனியார் நகை கடையில், 200 கிராம் நகைகள் வாங்கி, அதற்கு இன்சூரன்சும் செய்துள்ளனர். அந்த நகையை, திருவாரூரில் விற்று விட்டு, ரயிலில் கொள்ளை போனதாக நாடகமாடி, போலீசில் புகாரை பெற்று, இன்சூரன்ஸ் தொகையை பெற திட்டமிட்டு நுாதன மோசடியில் ஈடுபட முயன்றது தெரிந்தது.
இவர்கள், சில மாதங்களுக்கு முன், விஜயவாடாவில் இதே போல, இன்சூரன்ஸ் மோசடியில் ஈடுபட்டிருந்ததும், விசாரணையில் தெரிய வந்துள்ளது. மகாலிங்கம், ருக்மணியை கைது செய்தனர்.





















