DMK: சீனியர்களை ஓரங்கட்ட மு.க.ஸ்டாலின் முடிவு! இளசுகளைப் பிடிக்க திமுக-வில் இளைஞர்களுக்கு வாய்ப்பா?
சட்டமன்ற தேர்தல் தோல்வியால் திமுக-வில் மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்ட கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியீட்டிற்கு பிறகு திராவிட கட்சிகள் ஆட்டம் கண்டுள்ளது. இந்த தேர்தலின் முடிவுகளால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட கட்சியாக திமுக உள்ளது. ஆட்சி பறிபோகியது என்பதை காட்டிலும் திமுக-வின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்ததே அதற்கு முக்கியமான காரணம் ஆகும்.
வேலை செய்யாத சீனியர்கள்:
மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்வது உறுதி, தனிப்பெரும்பான்மையுடன் செல்வது உறுதி என்ற மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த திமுக-விற்கு இந்த தேர்தல் தோல்வி ஒரு பலத்த அடியாக அமைந்தது.
இந்த சூழலில், தேர்தல் தோல்விக்கான காரணங்களை திமுக அலசி ஆராய்ந்த போது கட்சியின் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை பல்வேறு தவறுகள் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, கட்சியின் மூத்த நி்ர்வாகிகள் பலரும் இந்த தேர்தலில் சரியாக பணியாற்றவில்லை என்றே கூறப்படுகிறது.
உட்கட்சி மோதல்:
தேர்தலில் இளையவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று உதயநிதி தரப்பில் அழுத்தம் தரப்பட்ட நிலையில், தங்கள் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று மூத்தவர்கள் பலரும் தலைமையிடம் கோரிக்கை கொடுத்த நிலையிலே வேட்பாளர்கள் திமுக-வில் களமிறங்கினர்.
இதில், தாங்கள் கேட்ட வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்காத தொகுதிகளில் திமுக மூத்த நிர்வாகிகள் யாரும் சரியாக பணியாற்றவில்லை என்று கூறப்படுகிறது. தோல்விக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மேலும், அனைவரிடமும் கருத்து கேட்டு திமுக தலைமை கோரிய விண்ணப்பத்திலும் இந்த குற்றச்சாட்டை பலரும் முன்வைத்துள்ளனர்.
ஓரங்கட்ட முடிவு:
இதையடுத்து, கட்சியில் இருந்து பல மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்ட தலைமை முடிவு செய்துள்ளது. தொடர்ந்து அவர்களுக்கு பதிலாக துடிப்பாக பணியாற்றும் நிர்வாகிகளை நியமிக்கும், கள யதார்த்தம் அறிந்தவர்களை நியமிக்கவும் முடிவு செய்துள்ளது. இதுமட்டுமின்றி இந்த தேர்தலில் திமுக-வின் கீழ்மட்டத்தில் உள்ள தவறுகளை மு.க.ஸ்டாலினிடம் கொண்டு சேர்க்காமல் மறைத்ததிலும் இந்த மூத்த நிர்வாகிகளின் பங்களிப்பு அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், தேர்தல் தோல்விக்கு காரணமான மூத்த நிர்வாகிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இந்த அதிரடி மாற்றங்களை திமுக செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சில மூத்த நிர்வாகிகளிடம் தாங்களே ஓய்வு எடுத்துக்கொள்வது போல ஒதுங்கிக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது,
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தற்போது கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து விலக இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலும் இதன் காரணமாகவே கூறப்படுகிறது. மேலும், அடுத்தடுத்த நாட்களில் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை பல மூத்த நிர்வாகிகள் ஓரங்கட்டப்படுவதும், ஓய்வு பெறுவதும் அரங்கேறும் என்று கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















