Aloor Shanavas: வாய்ப்பு கொடுக்காத திருமாவளவன்; மவுனம் கலைத்த விசிக ஆளூர் ஷாநவாஸ்!
Aloor Shanavas VCK: விசிகவில் ஆளூர் ஷாநவாஸுக்கு மீண்டும் சீட் வழங்கப்படாதது குறித்து, அவரே இன்று மவுனம் கலைத்துள்ளார்.

ஒரு கட்சியில் யாருக்கு, எப்போது, எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது அந்தக் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவு. அம்முடிவு எதுவாயினும் அதை ஏற்றுக் கொள்வதே சிறந்த அறம் என்று ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.
நாகை தொகுதி எம்எல்ஏவும் விசிகவின் துணைப் பொதுச் செயலாளராகவும் உள்ள ஆளூர் ஷாநவாஸுக்கு விசிகவில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கவில்லை என்று விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து விசிக தலைவர் திருமா விளக்கம் அளித்து இருந்தார்.
என்ன காரணம்?
அவர் விசிக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, வேட்பாளர் பட்டியலை விரைந்து வெளியிட வேண்டிய அவசரத்தில் இருந்த திமுகவினர், அரூர் வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்ட நிலையில் அரக்கோணத்தைத் தந்தார்கள். பல்லாவரத்தைக் கேட்டபோது பண்ருட்டியைத் தந்தார்கள், கடைசி நிமிடத்தில் அவசரகதியில் இவ்வாறு தொகுதிகள் முடிவாகின.
பல்லாவரம் கிடைத்திருந்தால் நிச்சயம் ஷா நாவாஸ் போட்டியிட்டு இருப்பார். ’’ஷா நாவாஸைத் தவிர்க்க வேண்டும். அவர் கூடாது’’ என்று எடுக்கப்பட்ட முடிவல்ல. அப்துல் ரகுமானுக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை’’ என்று பேசி இருந்தார். இந்த நிலையில், இதுகுறித்து ஆளூர் ஷாநவாஸ் மவுனம் கலைத்துள்ளார்.
பல்வேறு கருத்துக்களில் விவாதம்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், விசிக சார்பில் போட்டியிட எமக்கு மீண்டும் வாய்ப்பு அமையவில்லை என்பதை வைத்து வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிகிறேன்.
இதில் என் மேல் அன்பு கொண்டு எனக்கு ஆதரவாக கருத்துப் பரிமாறிய அனைத்துத் தோழர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
தலைமை எடுக்கும் முடிவு
அதே நேரத்தில், ஒரு கட்சியில் யாருக்கு எப்போது எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது அந்தக் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவாகும். அம்முடிவு எதுவாயினும் அதை ஏற்றுக் கொள்வதே சிறந்த அறமாகும்.
அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 8 வேட்பாளர்களும் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் விசிகவின் குரல் வலுவாக ஒலிப்பதற்கும், நமது கூட்டணி சார்பில் களம் காணும் அனைவரும் வெல்வதற்கும், திமுக தலைமையிலான நல்லாட்சி மீண்டும் அமைவதற்கும் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.
எனது பொது வாழ்க்கையில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றியதை விட, இன்னும் வீரியத்துடன் தொடர்ந்து அரசியல் களத்தில் பணியாற்றுவேன் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.





















