Puducherry Election Result: புதுச்சேரி சிம்மாசனத்தில் அமரப்போவது யார்? இன்று மதியம் தெரிந்துவிடும் ‘மெஜாரிட்டி’!
Puducherry assembly election result: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

புதுச்சேரி : நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் உள்ள 6 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் இந்த நடைமுறை நடைபெறவுள்ளது.
வரலாறு காணாத வாக்குப்பதிவு
கடந்த ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், புதுச்சேரி யூனியன் பிரதேச வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 91.23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மின்னணு இயந்திரங்களில் பதிவான 89.87 சதவீத வாக்குகளுடன், 12,936 தபால் வாக்குகளும் இதில் அடங்கும். மொத்தமுள்ள 9.5 லட்சம் வாக்காளர்களில், சுமார் 25 ஆயிரம் முதல்முறை வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். 30 தொகுதிகளில் போட்டியிட்ட 294 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று மதியத்திற்குள் தீர்மானிக்கப்படும்.
3 அடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்கள்
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுச்சேரி: லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரி, நேரு பாலிடெக்னிக்.
காரைக்கால்: கருணாநிதி பட்டமேற்படிப்பு மையம்.
மாஹே: நேரு அரசு மேல்நிலைப்பள்ளி.
ஏனாம்: அரசு கலைக்கல்லூரி.
இந்த மையங்களில் 2,600 புதுவை போலீசாரும், 500 துணை ராணுவத்தினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை நடைமுறை
மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கும் சேர்த்து 201 மேசைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 166 மேசைகளில் இயந்திர வாக்குகளும், 35 மேசைகளில் தபால் வாக்குகளும் எண்ணப்படுகின்றன. இதற்காக 859 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
காலை 8:00 மணி: தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும்.
காலை 8:30 மணி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) திறக்கப்பட்டு எண்ணிக்கை தொடங்கும்.
முடிவுகள் எப்போது?
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அட்டவணைப்படி எண்ணிக்கை இரண்டு சுற்றுகளாக நடைபெறுகிறது:
முதல் சுற்று (மதியம் 1 மணி வரை): மண்ணாடிப்பட்டு, வில்லியனூர், கதிர்காமம், லாஸ்பேட்டை, நெல்லித்தோப்பு, ஏனாம் உள்ளிட்ட 17 தொகுதிகளின் முடிவுகள் முதலில் வெளியாகும். மதியம் ஒரு மணி அளவில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பதற்கான தெளிவான முன்னிலை நிலவரம் கிடைத்துவிடும்.
இரண்டாம் சுற்று (மாலை 6 மணி வரை):
உழவர்கரை, காமராஜர் நகர், முதலியார்பேட்டை, காரைக்கால் தெற்கு உள்ளிட்ட மீதமுள்ள 13 தொகுதிகளின் முடிவுகள் மாலை 6 மணிக்குள் முழுமையாக அறிவிக்கப்படும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
வெற்றி கொண்டாட்டங்களின் போது அசம்பாவிதங்கள் தவிர்க்க புதுச்சேரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரம் மற்றும் கிராமப்புறங்களில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இன்று மாநிலம் முழுவதும் மதுக்கடைகளை மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
மதியம் ஒரு மணி முதலே மாநிலத்தின் புதிய முதலமைச்சர் யார்? ஆட்சிக் கட்டிலில் அமரப்போகும் கூட்டணி எது? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகத் தொடங்கும் என்பதால் புதுச்சேரி அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளது.
Before You Go
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
ட்ரெண்டிங் செய்திகள்



















