![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
வானூரில் வட்டாட்சியர் உதவி உடன் சுரண்டப்படும் செம்மண் - முதல்வரின் தனிப்பிரிவுக்கு மக்கள் புகார் மனு
வட்டாட்சியர் உமாமகேஸ்வரனிடம் புகார் தெரிவித்தால், புகார்தாரர்கள் குறித்த விவரங்களை ஊராட்சித் தலைவருக்கு கசியவிட்டு மிரட்டப்படுவதாக மக்கள் புகார்
![வானூரில் வட்டாட்சியர் உதவி உடன் சுரண்டப்படும் செம்மண் - முதல்வரின் தனிப்பிரிவுக்கு மக்கள் புகார் மனு Villupuram: Shrimp being exploited with the help of Dasildar in Vanur - Complaint to the Chief Minister's private unit வானூரில் வட்டாட்சியர் உதவி உடன் சுரண்டப்படும் செம்மண் - முதல்வரின் தனிப்பிரிவுக்கு மக்கள் புகார் மனு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/18/f8f4b8b52b41cfb085ef6b5374c24960_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகில் உள்ள பட்டானூரில் இருந்து ஆரோவில்லுக்கு செம்மண் கடத்தி விற்பனை செய்யப்படுவதாகவும், அதற்கு வானூர் வட்டாட்சியர் உடந்தையாக இருப்பதாகவும் கிராம மக்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக முதல்வரின் தனி பிரிவுக்கு பட்டானூர் கிராம மக்கள் அனுப்பியிருக்கும் மனுவில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்திற்குட்பட்ட திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் உள்ளது பட்டானூர் வருவாய் கிராமம். மண்வளம் மிக்க இக்கிராமத்தின் அப்பன் சாவடி குட்டை, சமட்டியான் குளம், வசந்தபுரம் ஆகிய பகுதிகளில் ஓடை புறம்போக்கில், அரசின் எவ்வித அனுமதியின்றி பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு பள்ளம் வெட்டி, செம்மண்ணை ஆரோவில் பகுதியில் கொண்டு விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 4 மாதங்களாக இது நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள கவுன்சிலர் ஒருவரின் கணவருக்குச் சொந்தமான லாரியில், ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் நாளொன்றுக்கு 100 லோடு டிப்பர் லாரிகளில் கொண்டு செல்வதால் சாலைகள் மோசமடைந்து உள்ளது என அந்த மனுவில் கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இது குறித்து வானூர் வட்டாட்சியர் உமாமகேஸ்வரனிடமோ, பட்டானூர் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனுக்கோ புகார் தெரிவித்தால், புகார் தெரிவிக்கும் நபர்கள் குறித்து ஊராட்சித் தலைவருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் மூலம் மிரட்டப்படுகின்றனராம். இதனால் மக்கள் அவர்களை அணுக முடியவில்லை. மேலும் குட்டைப் புறம்போக்கு நிலங்களை சமன் செய்து, அவற்றை பட்டாவாக மாற்றித் தருகிறோம் எனக் கூறி பணம் பெறுவதாகவும் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ள கிராம மக்கள், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக வானூர் வட்டாட்சியர் உமா மகேஸ்வரனிடம் கேட்டபோது, வானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கேட்டு கொண்டதன் பேரில் மண் அள்ள அனுமதி அளித்ததாகக் கூறினார். வானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமனிடம் இதுபற்றி கேட்டபோது, அதுபோன்று யாருக்கும் நான் கடிதம் கொடுக்கவில்லை. அங்கு செம்மண் குவாரி இயங்குவதும் தனக்கு தெரியாது என்றார். மேலும், செம்மண் கடத்தலை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வட்டாச்சியர் அலுவலத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)