![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
திருவண்ணாமலை: 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
செய்யாறு அருகே ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுனருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
![திருவண்ணாமலை: 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை Tiruvannamalai Auto driver who sexually assaulted 11 year old girl gets 20 years in jail திருவண்ணாமலை: 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/27/f609f75c8c3659f3059adae9974638b91658920191_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா குண்ணவாக்கம் குளக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். வயது (34). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ந் தேதி அந்த பகுதியில் உள்ள காட்டு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு 2 சிறுமிகள் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். அங்கிருந்த சுமார் 11 வயதுடைய சிறுமி ஒருவரை சுரேஷ் தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த சமயத்தில் அவ்வூரில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று கொண்டிருந்த ஒலிபெருக்கியின் சத்தம் காரணத்தினால் சிறுமியின் அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை. அங்கிருந்த மற்றொரு சிறுமி சுரேசுடன் சென்ற சிறுமியை தேடி சென்றார். அப்போது சுரேஷ் சிறுமியை வன்கொடுமை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர் அங்கிருந்து ஓடி ஊருக்குள் சென்று இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சிறுமியின் தாய் மற்றும் ஊர் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பொதுமக்கள் வருவதை கண்டதும் சுரேஷ் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சுரேசுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
இதேபோல் திருவண்ணாமலையில் பெற்ற மகள் உள்பட 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த கூலி தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கடந்த 2018-ம் ஆண்டு அவரது 12 வயதுக்குட்பட்ட மகளை பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால் அச்சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அச்சிறுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு வந்த அவரது தந்தை சிறுமியிடம் மீண்டும் தகாத முறையில் நடக்க முயன்று உள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவம் குறித்து அவரது தாயிடம் தெரிவித்துள்ளார். மேலும் சிறுமியின் தாய்க்கு அவரது கணவர் 12 வயதுக்கு உட்பட்ட உறவுகார சிறுமி ஒருவரையும் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து அச்சிறுமியின் தாய் ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலி தொழிலாளியை கைது செய்தனர். மேலும் அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார். இந்த நிலையில் இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அதில் பெற்ற மகள் மற்றும் உறவுகார சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலி தொழிலாளிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு தரப்பில் தலா 2 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி பரிந்துரை செய்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)