![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime: பெரும் பதற்றம்.. ஆலங்குளம் அருகே இரட்டைக்கொலை...! தப்பியோடிய ராணுவ வீரருக்கு வலைவீச்சு....!
நெல்லை, ஆலங்குளம் அருகே இடத்தகராறு காரணமாக ராணுவ வீரர் இருவரை வெட்டிப்படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Crime: பெரும் பதற்றம்.. ஆலங்குளம் அருகே இரட்டைக்கொலை...! தப்பியோடிய ராணுவ வீரருக்கு வலைவீச்சு....! thirunvelveli alangulam army man killed 2 person police searching know what was happening Crime: பெரும் பதற்றம்.. ஆலங்குளம் அருகே இரட்டைக்கொலை...! தப்பியோடிய ராணுவ வீரருக்கு வலைவீச்சு....!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/30/cc6b527c802225261cffdf20152f57591688110933138109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் அசோக்குமார்(29). வழக்கறிஞரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது உறவினரான குழந்தை பாண்டியின் மகன் ராணுவ வீரரான சுரேஷ்(27). இவருக்கும் அசோக்குமார் என்பவருக்கும் இடையே இடத்தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் பிரச்சினை இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் அசோக் குமாருக்கு ஆதரவாக அவரது பெரியப்பா துரைராஜ் (57) என்பவரும் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆலங்குளம் போலீசாருக்கு புகார் சென்றதை தொடர்ந்து இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த சூழலில் நேற்று காலை சுரேஷ் தரப்பினர் சின்னதுரைக்கு சொந்தமான வைக்கோல் போரை தீ வைத்து எரித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சின்னதுரை மற்றும் அவரது மகன் அசோக்குமார் ஆகியோர் ஆலங்குளம் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் தான் நேற்று இரவு துரைராஜ் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.
இரட்டைக்கொலை:
அப்போது அங்கு வந்த ராணுவ வீரரான சுரேஷ் உள்ளிட்ட சிலர் துரைராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார். பின் அங்கிருந்து அவர்கள் அரிவாளுடன் சின்னதுரையின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வக்கீல் அசோக்குமாரையும் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் அசோக்குமார் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
அசோக்குமாரின் பெரியப்பா துரைராஜ் பலத்த காயங்களுடன் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர், குறிப்பாக சம்பவ இடத்திற்கு வந்த தென்காசி எஸ்பி சாம்சன் மற்றும் ஆலங்குளம் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தப்பியோட்டம்:
மேலும் ஆலங்குளம் போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சுரேஷை தேடி வருகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்க நெட்டூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இடத்தகராறு காரணமாக ஆலங்குளம் அருகே வழக்கறிஞர் மற்றும் அவரது பெரியப்பா என இருவர் ராணுவ வீரரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)