Facebook-ல் பெண்களின் புகைப்படங்களை திருடி மார்பிங் ; பணத்தாசையில் சிக்கிய வாலிபர் கைது
புதுச்சேரி உள்ளிட்ட பல பெண்களின் புகைப்படங்களை பேஸ்புக்கில் இருந்து திருடி, அதனை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பணம் பறித்த வாலிபர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி பெண்ணை, சமூக வலைதளத்தில் ஆபாசமாக சித்தரித்த, தென்காசி வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சமூக வலைதளத்தில் பெண்ணை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் கைது
புதுச்சேரியை சேர்ந்த ஒருவர், தனது மனைவியை சமூக வலைதளத்தில் ஆபாசமாக சித்தரித்துள்ளதாக, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சீனியர் எஸ்.பி., நாராசைதன்யா, எஸ்.பி., பாஸ்கர் ஆகியோர் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், பெண்ணின் புகைப்படத்தை, சமூக வலைதளத்தில் ஆபாசமாக சித்தரித்தது, தென்காசி மாவட்டம், வீரசிகாமணியை சேர்ந்த சிவசக்தி மகன் மனோகர், (வயது 23) என்பது தெரிய வந்தது.
போலீசார் தென்காசிக்கு சென்று, மனோகரை பிடித்து விசாரித்தனர். அவர், புதுச்சேரி பெண் உள்ளிட்ட பல பெண்களின் புகைப்படங்களை பேஸ்புக்கில் இருந்து திருடி, அதனை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பணம் பறித்ததை ஒப்புக் கொண்டார். அதையடுத்து, புகைப்படத்தை மார்பிங் செய்ய பயன்படுத்திய கருவி, மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். மனோகரை கைது செய்து, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா கூறுகையில்,
சமூக வலைதளத்தில் அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து வரும் நட்பு கோரிக்கையை ஏற்க வேண்டாம். அவர்களுடன் உரையாடுவதையும், புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதை தவிர்க்கவும். சைபர் குற்றம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால், உடனடியாக கட்டணமில்லா எண் 1930 அல்லது cybercrime.gov.inஎன்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.
விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.
அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.
சிக்கிக் கொள்ளாதீங்க... வங்கி ஓடிபி எண் சொல்லாதீங்க
மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.





















