![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime : பதறவைத்த சம்பவம்.. தென்காசியைத் தொடர்ந்து நெல்லையில் கடத்தப்பட்ட காதல் திருமண ஜோடி.. என்ன நடந்தது?
நீதிபதியின் முன்பு சுமிகா, தான் திருமணம் செய்த கணவர் முருகனுடன் செல்வதாக தெரிவித்ததை அடுத்து நீதிமன்றம் சுமிகாவை கணவருடன் அனுப்பி வைத்தது.
![Crime : பதறவைத்த சம்பவம்.. தென்காசியைத் தொடர்ந்து நெல்லையில் கடத்தப்பட்ட காதல் திருமண ஜோடி.. என்ன நடந்தது? Crime Tenkasi, Nellai also reported that the girl who had married for love was kidnapped by her parents TNN Crime : பதறவைத்த சம்பவம்.. தென்காசியைத் தொடர்ந்து நெல்லையில் கடத்தப்பட்ட காதல் திருமண ஜோடி.. என்ன நடந்தது?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/0439c2abd8469b4f1a372f7a24f42a1b1676640995555109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீ ரங்கநாராயணபுரம் அம்மன் கோவிலை தெருவை சேர்ந்தவர் முருகன்(24). அதே தெருவை சேர்ந்தவர் சுமிகா(19). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் கடந்த ஜனவரி 18ஆம் தேதி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. அதன் பின்னர் ஜனவரி 25ஆம் தேதி தங்கள் காதல் திருமணத்தை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த பெண்ணின் பெற்றோர் குறிப்பாக சுமிகாவின் தாயார் பத்மா சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனது மகளைக் காணவில்லை என ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து உள்ளார். இதனையடுத்து கடந்த 30 ஆம் தேதி கூடங்குளம் போலீசார் சுமிகாவை மீட்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிபதியின் முன்பு சுமிகா தான் திருமணம் செய்த கணவர் முருகனுடன் செல்வதாக தெரிவித்ததை அடுத்து நீதிமன்றம் சுமிகாவை கணவருடன் அனுப்பி வைத்தது. இந்த நிலையில் முருகன் தனது மனைவியை அழைத்துக் கொண்டு தங்களது சொந்த ஊரான ஸ்ரீ ரங்க நாராயணபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சுமிகாவின் தந்தை முருகேசன் மற்றும் அவரது உறவினர்கள் சுமார் 12 பேர் முருகனின் வீட்டிற்குள் நுழைந்து தகாத வார்த்தைகளால் பேசி சுமிகாவை தர தரவென்று இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக சுமிகாவின் கணவர் முருகன் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் கூடங்குளம் போலீசார் சுமிதாவின் தந்தை முருகேசன், அவரது அம்மா பத்மா, உறவினர்கள் தங்க முத்து, அமுதா, அனுசியா, விஜயகுமார், செல்வகுமார், பாப்பா, தங்கம்மாள், வைகுண்டமணி, பஞ்சு பழம் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
அதே போல கடத்தப்பட்ட சுமிகாவை அவரது பெற்றோர் தலைமறைவாக வைத்துள்ள நிலையில் சுமிகாவை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவின் படி கணவர் வீட்டில் இருந்த சுமிகாவை அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கடத்தி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தென்காசியில் காதல் திருமணம் செய்த கிருத்திகா வினித் தம்பதியரை தாக்கி கிருத்திகாவின் பெற்றோர் அவரை கடத்தி சென்ற வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நெல்லையிலும் அதே போன்று ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)