போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
பழவந்தாங்கலில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமே அங்கு இருக்கும் மதுபானக் கடை என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகளவில் நடப்பதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்த நிலையில் பழவந்தாங்கலில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் மககள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை:
சென்னை எழும்பூரில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியை முடித்து வீட்டிற்குத் திரும்பிய பெண் காவலரின் செயினை பறித்தது மட்டுமின்றி அவருக்கு பாலியல் தாெல்லை அளிக்கவும் அந்த நபர் முயற்சித்துள்ளார். இதையடுத்து, பெண் காவலரின் அதிர்ச்சிக்குரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து அந்த பெண் காவலரை மீட்டனர். மேலும், செயினை பறித்து பாலியல் தொல்லை அளித்தவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரத்திற்கு முக்கிய காரணம் பழவந்தாங்கல் ரயில்நிலையம் அருகில் உள்ள மதுபானக் கடையே காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அப்பகுதி மக்கள் இதுதொடர்பாக கூறியதாவது,
ஒயின்ஷாப்:
இந்த மாதிரி அடிக்கடி சம்பவங்கள் நடக்கிறது. செயின் பறிப்பு, பெண்களுக்கு தொல்லை அடிக்கடி நடக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த மதுபானக்கடை. இந்த மதுபானக்கடையை வேறு இடத்தில் வைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த பழவந்தங்கால், நங்கநல்லூர் மக்கள் உங்களை கோடான கோடி கும்பிடுவோம்.
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தின் இரண்டு பக்கமும் உட்கார்ந்து கொள்கிறார்கள். குடித்துவிட்டு மதுபாட்டில்களை அங்கேயே வைத்து விடுகிறார்கள். அந்த படிகளில் பயணிகள் ஏறவும் முடியாது. இறங்கவும் முடியாது. காவல்துறையினர் இல்லாவிட்டால் அந்த இடத்தில் அமைதியாக இருக்கிறார்கள். அப்படி மாற்றினால் பழவந்தாங்கல், நங்கநல்லூர் மக்கள் நிம்மதி அடைவார்கள். பெண்கள் மாலை நேரத்தில் இந்த சாலையில் நடக்க இயலவில்லை. இதனால், பெண்கள் அச்சத்தில் இறங்கி நடந்து போகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மக்கள் அதிர்ச்சி:
தமிழ்நாட்டில் தொடர்ந்து பல இடங்களில் இதுபோன்று பாலியல் வன்கொடுமைகள், பாலியல் தொல்லைகள் அரங்கேறி வரும் சூழலில், தமிழக காவல்துறையைச் சேர்ந்த பெண் காவலருக்கே பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை மக்களுக்கு ஏற்படு்த்தியுள்ளது. பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சத்யபாலு என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளேயே பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இசிஆர் சாலையில் பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் இருந்த இளைஞர்கள் துரத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு பல இடங்களிலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருவது தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

