மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், பிரணாய், சாய் பிரணீத், கஷ்யப் உள்ளிட்ட முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் பி.வி.சிந்து, பிரணாய், கஷ்யப், சாய் பிரணீத் ஆகியோர் வெற்றி பெற்றனர். இரண்டாவது சுற்றில் பி.வி.சிந்து மற்றும் பிரணாய் மட்டும் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். 


 


இந்நிலையில் இன்று காலிறுதிச் சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து உலக தரவரிசையில் 2ஆம் நிலை வீராங்கனையான தாய் சு யிங்கை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டி சிந்துவிற்கு மிகவும் கடினமான போட்டியாக கருதப்பட்டது. இந்தப் போட்டியில் முதல் கேமை தாய் சு யிங் 21-13 என்ற கணக்கில் எளிதாக வென்றார். 


 




இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது கேமில் பி.வி.சிந்து சுதாரித்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டாவது கேமில் அசத்திய சிந்து 21-12 என்ற கணக்கில் வென்று அசத்தினார். இரு வீராங்கனைகளும் தலா ஒரு கேம் வென்று இருந்தனர். மூன்றாவது கேம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் தாய் சு யிங் தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி அதிரடி காட்ட தொடங்கினார். மூன்றாவது கேமை தாய் சு 21-12 என்ற கணக்கில் எளிதாக வென்றார். அத்துடன் 21-13,12-21,21-12 என்ற கணக்கில் போட்டியை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் பி.வி.சிந்து தாய் சு யிங்கிடம் 17வது முறையாக தோல்வி அடைந்துள்ளார். பி.வி.சிந்து தாய் சு யிங்கை 5 முறை மட்டுமே வீழ்த்தியுள்ளார். 


 


கடைசியாக தாய் சு யிங்கை பி.வி.சிந்து 2019ஆம் ஆண்டு தோற்கடித்தார். அதன்பின்னர் நடைபெற்ற 7 மோதல்களிலும் தாய் சு யிங் சிந்துவை தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரணாய் மட்டும் எஞ்சியுள்ளார். அவர் இன்று நடைபெறும் காலிறுதிப் போட்டியில் ஜப்பான் வீரர் கண்டா சுயனேமாவை எதிர்த்து விளையாட உள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண