தமிழகத்தில் பல கிரிக்கெட் வீரர்களை இந்திய கிரிக்கெட் அணிக்கு அறிமுகப்படுத்திய தமிழ்நாடு பிரீமியர் லீக் திருவிழா 7 வது சீசன் இம்மாதம் 12-ஆம் தேதி கோவையில் தொடங்கி நடைபெற உள்ளது. சேலம், கோவை, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் நடைபெறுகிறது. டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 10 போட்டிகள் சேலத்தில் நடப்பதாக டி.என்.பி.எல் நிர்வாகிகள் தெரிவித்தனர். சேலத்தில் 24 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை லீக் போட்டிகளும், ஜூலை மாதம் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் தகுதிச்சுற்று மற்றும் வெளியேறுதல் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களின் 8 அணிகள் இந்தப் போட்டியில் விளையாட உள்ளது. 


 


தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டிகள் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. சேலம் கிரிக்கெட் சங்க செயலாளர் பாபு குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் ஆர்.என்.பாபா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டு தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஜூன் 12 தொடங்கி ஜூலை 12 ஆம் தேதி வரை 28 லீக் போட்டிகளும், 4 நாக் அவுட் போட்டிகளும் நடைபெற உள்ளன. நாக் அவுட் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டால் கூடுதலாக ஒருநாள் ஒதுக்கீடு செய்யும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க விளையாட்டு மைதானத்தில் 8 லீக் போட்டிகளும், தகுதிச்சுற்று மற்றும் வெளியேற்றுதல் சுற்று போட்டி என 10 போட்டிகள் நடைபெற உள்ளது. 


 


தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் அணிக்கும் ரூ.50 லட்சம் தொடங்கி மற்ற இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு ரூ.1.7 கோடி வரை பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. சேலம் நடராஜன், சாய் சுதர்ஷன், விஜய் சங்கர், இந்திரஜித் போன்ற பிரபல வீர்ர்கள் தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டிகளில் விளையாட உள்ளனர். அடுத்த ஆண்டு முதல் மகளிர் தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டிகளைத் தொடங்க வாய்ப்புள்ளது என்று கூறினார். மேலும் போட்டிக்கான டிக்கெட்டுகளை Paytm செயலி மூலமாக ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். இந்த ஆண்டு சேலம் கிரிக்கெட் மைதானத்தில் 6,500 பார்வையாளர்கள் போட்டியை காண இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான டிக்கெட் விலை 200 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது‌.


தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 37 மாவட்டங்களைச் சேர்ந்த கிராமங்களில் திறமையுள்ள இளைஞர்களை கண்டறியும் வகையில் கடந்த சில வாரங்களாக தேர்வு நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 6 ஆயிரம் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் இருந்து 100 பேரும், 100 பேரில் இருந்து 60 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு வருட காலத்திற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பயிற்சியளிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் ஆர்.என்.பாபா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.