ஐபிஎல் தொடரின் 18வது சீசனின் இறுதிப்போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. 18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் கோப்பையை ஒரு முறை கூட கைப்பற்றாத ஆர்சிபி - பஞ்சாப் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இதனால், நாளை ஐபிஎல் மகுடத்தை புதிய சாம்பியன் கைப்பற்றப்போவது உறுதியாகியுள்ளது.  இறுதிப்போட்டி:

அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் களமிறங்க உள்ள ஆர்சிபி - பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் சரிசம பலத்துடன் களமிறங்குகிறது. டி20 போட்டிகளைப் பொறுத்தமட்டில் குறிப்பாக ஐபிஎல் போன்ற தொடரில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பதில் பேட்ஸ்மேன்களை காட்டிலும் பந்துவீச்சாளர்களின் பங்கே அதிகளவு ஆகும். 

ஏனென்றால், டி20 போட்டிகளைப் பொறுத்தவரை சிக்ஸர், பவுண்டரி விளாசும் நோக்கத்துடனே பேட்ஸ்மேன்கள் களமிறங்குவார்கள். இவர்களை கட்டுப்படுத்தும் பெரும் பங்கு பந்துவீச்சாளர்களுக்கு உண்டு. திறம்பட இந்த அதிரடி பேட்ஸ்மேன்களை கையாளும் பந்துவீச்சாளர்களின் கையில்தான் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியும் உண்டு. 

நீண்ட பேட்டிங் பட்டாளத்தை இரு அணிகளும் கொண்டுள்ள நிலையில், இந்த பேட்டிங் பட்டாளத்தை சமாளிக்கும் வல்லமை பந்துவீச்சு பட்டாளம் இரு அணிகளிலும் உண்டு. அந்த பந்துவீச்சாளர்கள் யார்? யார்? என்பதை கீழே விரிவாக காணலாம். 

ஆர்சிபி:

இதுவரை நடந்த 17 சீசன்களில் ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் அவர்களின் பந்துவீச்சு பலவீனமே ஆகும். இதன்காரணமாகவே கெயில், டிவிலியர்ஸ் ஆகிய ஜாம்பவன்களுடன் இணைந்து கோலி பல வருடங்களாக முயற்சித்தும் கோப்பை வசப்படவில்லை. ஆனால், நடப்பு சீசனில் ஆர்சிபி அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்துள்ளது. 

ஹேசில்வுட், புவனேஷ்வர், யஷ் தயாள் வேகத்தில் முக்கிய அம்சமாக உள்ளனர். குறிப்பாக, ஆர்சிபி அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக ஹேசில்வுட் உள்ளார். எதிரணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துவதுடன் நெருக்கடியான சூழலில் ஆட்டத்தை மாற்றி ஆர்சிபி வசம் கொண்டு வரும் பணியை சிறப்பாக செய்து வருகிறார். 

ஸ்விங் கிங் எனப்படும் புவனேஷ்வர் குமார் முக்கிய வீரராக திகழ்கிறார். அவரது அனுபவமும், வேகமும் குவாலிஃபயரில் நன்றாக ஜொலித்தது. இந்த சீசனின் தொடக்கத்தில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் குவாலிஃபயர் 1ல் சிறப்பாக வீசினார். அவர் மீண்டும் தனது அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினாலே எதிரணிக்கு பெரும் சவால்தான்.  

யஷ் தயாள் ஆர்சிபி அணியி்ன் தவிர்க்க முடியாத டெத் பவுலராக உருவெடுத்துள்ளார். மிகவும் நெருக்கடியான நேரத்தில் கட்டுக்கோப்பாக வீசுவதில் வல்லவராக உள்ளார். அவர் சிறப்பாக வீசினால் எதிரணிக்கு சவால். இவர்கள் 3 பேர் வேகத்தில் முக்கிய வீரர்களாக உள்ள நிலையில் சுழல் அஸ்திரமாக சுயாஷ் சர்மாவும், குருணல் பாண்ட்யாவும் உள்ளனர். 

கட்டுக்கோப்பாகவும் விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீசும் ஆற்றல் கொண்டவராகவும் சுயாஷ் சர்மா உருவெடுத்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான குவாலிஃபயர் 1ல் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றொரு சுழல் சாம்ராட்டாக குருணல் பாண்ட்யா உள்ளார். சுழற் பந்துவீச்சாளர்களுக்கான விதிவிலக்காக பாண்ட்யா உள்ளார். கூக்ளி, லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின் ஆகியவற்றிற்கு பதிலாக யார்க்கர், பவுன்சர் என சுழலில் யாருமே வீச முடியாத பந்துவீச்சை வீசி வருகிறார். இவர்கள் மட்டுமின்றி ஷெப்பர்ட் மித வேகப்பந்துவீச்சாளர் ஆவார். லிவிங்ஸ்டனுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தால் அவர் பந்துவீசும் வாய்ப்பும் கிடைக்கும். அவரும் சிறந்த சுழற்பந்துவீச்சாளர். 

பஞ்சாப்:

பஞ்சாப் அணியும் பந்துவீச்சில் அசத்தலாகவே உள்ளது. அந்த அணியில் அர்ஷ்தீப்சிங், ஜேமிசன், விஜயகுமார் வைஷாக், சாஹல், ஹர்ப்ரீத் ப்ரார், ஓமர்சாய், சாஹல், ஸ்டோய்னிஸ் உள்ளனர். பஞ்சாப் பந்துவீச்சை வழிநடத்தும் பொறுப்பை அர்ஷ்தீப்சிங் ஏற்றுக்கொண்டுள்ளார். இடது கை வேகப்பந்துவீச்சாளரான அவர்  திறம்பட பந்துவீசினால் பஞ்சாப்பிற்கு பலமாக அமையும். அவரும் சிறந்த டெத் பவுலர் ஆவார். 

அதேபோல, பஞ்சாப்பின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ஜேமிசன் உள்ளார். ஹேசல்வுட்டைப் போல 6 அடி உயரமுள்ள இவர் மும்பைக்கு எதிராக அசத்தலாக பந்துவீசினார். அவரது அசத்தல் பந்துவீச்சு தொடர்ந்தால் பஞ்சாப்பிற்கு நம்பிக்கை அதிகரிக்கும். முன்னாள் ஆர்சிபி வீரரான விஜயகுமார் வைஷாக் நல்ல வேகப்பந்துவீச்சாளர் ஆவார். அவர் நன்றாக வீசினால் சவால் அளிக்க முடியும். ஓமர்சாய் பஞ்சாப்பிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக குவாலிஃபயர் போட்டியில் வீசினால், அவர் இறுதிப்போட்டியில் அப்படி பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும். 

பிரதான வேகப்பந்து வீச்சாளர்களான இவர்களுடன் பஞ்சாப்பின் சுழலை முன்னாள் ஆர்சிபி வீரரான சாஹல் வழிநடத்த உள்ளார். அனுபவம் நிறைந்த சாஹல் சுழலில் மிரட்டினால் ரன்கள் குவிப்பது சவாலாக மாறிவிடும். அவருக்கு பக்கபலமாக ப்ரார் உள்ளார். அவருக்கும் ஐபிஎல் தொடரில் ஏராளமாக பந்துவீசிய அனுபவம் உண்டு. இந்த சுழல் கூட்டணி தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். இந்த பிரதான பந்துவீச்சாளர்கள் மட்டுமின்றி ஸ்டோய்னிஸ் மிதவேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார். முஷீர்கானும் சுழலில் அசத்தும் திறன் கொண்டவர். 

இரு அணிகளும் சரிசம பந்துவீச்சு பலத்துடன் காணப்படுவதால் நாளை நடக்கும் போட்டியில் எந்த அணியின் பந்துவீச்சு மைதானத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்த அணி முதல் முறையாக கோப்பையை முத்தமிடும்.