Virat Kohli: "இப்படி நடந்தா விளையாடமாட்டேன்.." 2027 உலகக்கோப்பையில் விராட் கோலி விளையாடமாட்டாரா?
2027ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடுவது குறித்து விராட் கோலி அளித்துள்ள பேட்டி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

உலக கிரிக்கெட்டின் அரசன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் விராட் கோலி. இந்திய கிரிக்கெட் அணிக்கு வீரராகவும், கேப்டனாகவும் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்தவர். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆடி வருகிறார்.
உலகக்கோப்பையில் விராட் கோலி ஆடுவாரா?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆடி வரும் விராட் கோலி அடுத்தாண்டு நடக்கும் 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த சூழலில், அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,
நான் உடற்பயிற்சி செய்கிறேன். சத்தான உணவையே சாப்பிடுகிறேன். அதுவே எனது அன்றாட வாழ்க்கை. நான் அந்த வாழ்க்கையையே விரும்புவதால் அவ்வாறு வாழவே விரும்புகிறேன். இது கிரிக்கெட் விளையாடுவதற்காக மட்டும் அல்ல.
2027ம் ஆண்டு உலகக்கோப்பையில் நீங்கள் விளையாட விரும்புகிறீர்களா? என்ற கேள்வி என்னிடம் பல முறை கேட்கப்பட்டுள்ளது. எனக்கு அதற்கான பதில் தெரியும். நான் என் வீட்டை விட்டு எனது உடைமைகளுடன் வந்து எனக்கு என்ன வேண்டும் என்றே தெரியவில்லை என்றா சொல்லப்போகிறேன்? நான் விளையாட வந்தால் நிச்சயமாக விளையாடவே விரும்புகிறேன். கண்டிப்பாக நான் கிரிக்கெட் விளையாட வேண்டுமென்றால் நான் விளையாடுவேன். இந்திய அணிக்காக உலகக்கோப்பை விளையாடுவது ஒரு அற்புதமான தருணம். ஆனால், அந்த மதிப்பு இரண்டு தரப்பு சார்ந்ததாக இருக்க வேண்டும்.
மரியாதை இருந்தால் இருப்பேன்:
நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். அந்த சூழலுக்கு என்னால் மதிப்பு கூடும் என்றால், நான் அங்கம் வகிப்பதால் மதிப்பு உயரும் என்று அந்த சூழலும் கருதினால் நான் அங்கு இருப்பேன். ஒருவேளை, நான் எனது திறமையையும், தகுதியையும் நிரூபிக்க வேண்டும் என்று கருதினால் அங்கு நான் இருக்க மாட்டேன்.
நான் பயிற்சியில் நேர்மையாக இருக்கிறேன். ஆட்டத்தை அணுகும் விதத்திலும் நான் நேர்மையை கடைபிடிக்கிறேன். கடினமாக உழைக்கிறேன். களத்தில் விளையாடும்போது மற்றவர்களைப் போல அல்லது அவர்களை விட கூடுதலாக உழைக்கிறேன். ஆட்டத்தை சரியான முறையில் விளையாடுகிறேன்.
அற்புதம்:
விஜய் ஹசாரே தொடரில் சென்று விளையாடி நான் யாருக்கும் எதையும் நிரூபிக்கப் போவதில்லை என்பதில் எனது மனம் தெளிவாக இருந்தது. நான் அங்கே செல்வது விளையாடுவதற்காக மட்டுமே. ஏனென்றால், எனக்கு விளையாடுவது மிகவும் பிடிக்கும். விஜய் ஹசாரே தொடரில் அப்படித்தான் விளையாடினேன். அது மிகவும் அற்புதமாக இருந்தது.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
கம்பீர் - அகர்கர் அழுத்தம்:
ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் அடுத்தாண்டு நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பையில் ஆடுவார்களா? என்பதே ஆகும். அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் அணித் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இருவரும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அணியில் நீடிக்க முழு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.
விராட் கோலி முழு உடற்தகுதியுடன், ஆட்டத்திறனுடனும் இருக்கும்போதும் அவரை டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்பட்டதாகவே குற்றச்சாட்டு உள்ளது.
பேட்டிங் தூண்கள்:
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் அணியின் கடந்த கால செயல்பாட்டின் தரவுகளை எடுத்துப் பார்த்தால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவர் மட்டுமே அணியின் பேட்டிங் ஆர்டரை தாங்கும் தூணாக தொடர்ச்சியாக உள்ளனர். மற்ற வீரர்களிடம் நிலையான மற்றும் ஸ்திரத்தன்மையான பேட்டிங் காணப்படவில்லை. இதனால், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இந்திய அணிக்காக தொடர்ந்து ஆட வேண்டும் என்று ரசிகர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















