சுரங்க பாதையில் மழை நீர் தேங்காமல் இருக்க தண்ணீர் இறைக்கும் மோட்டார் ரூம், சுற்றுச்சுவர், இருபுறமும் கழிவு நீர் ஓடுகால், மேற்கூரை போன்றவற்றை அமைத்தால் கிராம மக்களுக்கு அசவுகரியம் குறைய வாய்ப்பிருக்கிறது.

 

ரயில்வே மேம்பாலம்



ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த லாந்தை கிராமம் அருகே ரயில்வே மேம்பால கட்டவும், மழைக்காலத்திற்குள் சுரங்கப்பாதை பணிகளை முடிப்பது பற்றியும், ஆலோசனை கூட்டம் மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கூடுதல் கூட்ட ரயில்வே மேலாளர் எல்.என். ராவ், முதுநிலை கோட்ட பொறியாளர் எம். கார்த்திக், முதுநிலை  கோட்ட தலைமை பொறியாளர் சந்திப் பாஸ்கர், கட்டுமான பிரிவு உதவி பொறியாளர் கே. ஆர். ராதா கிருஷ்ணன் ஆகியோருடன் லாந்தை கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 


 

 

கூட்டத்தில் பேசிய கோட்ட ரயில்வே மேலாளர், "ரயில்வே மேம்பாலமும் சுரங்கப்பாதையும் கிராம மக்களுக்கு முக்கியமான ஒன்று. பாதி கட்டி முடிக்கப்பட்ட சுரங்க பாதையில் கிராம மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மழை நீர் தேங்காமல் பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை என வலியுறுத்தினார். ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான ஒப்பந்த புள்ளிகள் ஜூலை மாதம் 9 மற்றும் 16 ஆகிய நாட்களில் பரிசீலனை செய்யப்பட்டுள்ளன. ரயில்வே மேம்பாலம் கட்ட  ஒப்பந்ததாரர் விரைவில் நியமிக்கப்பட உள்ளார். சுரங்க பாதையில் மழை நீர் தேங்காமல் இருக்க தண்ணீர் இறைக்கும் மோட்டார் ரூம், சுற்றுச்சுவர், இருபுறமும் கழிவு நீர் ஓடுகால், மேற்கூரை போன்றவற்றை அமைத்தால் கிராம மக்களுக்கு அசவுகரியம் குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் லாந்தை கிராம மக்கள் முதலில் மேம்பால பணியை ஆரம்பிக்க வேண்டும். அதுவரை சுரங்கப்பாதை பணிகளை துவக்க கூடாது. சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கினாலும் அது பற்றி புகார் தெரிவிக்க மாட்டோம் என தெரிவித்தனர்.  இருந்தபோதிலும் கிராம மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாக்கி உள்ள சுரங்கப்பாதை பணிகளை முடிக்க ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கிராம மக்களிடம் ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது.