மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் (45) திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் பைப் கடை நடத்தி வருகின்றார். தனது கடையில் பணிபுரியும் 4 ஆண் மற்றும் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஊழியருடன் கடந்த சனிக்கிழமை இரவு 1.30 மணியளவில் செல்லூர் பகுதியிலுள்ள திரையரங்கில் திரைப்படம் பார்க்க சென்றுள்ளனர்.  திரைப்படம் முடிந்து வீட்டிற்கு செல்லும் போது நேதாஜி சாலை அருகே இரவு பாதுகாப்பு பணியில் இருந்த ஹெட் கான்ஸ்டபிள் முருகன் மற்றும் மற்றொரு காவலர் இருந்துள்ளார் வந்தவர்களை நிறுத்தி விசாரணை செய்த பின் மகேஷ்குமார் தனியாக வீட்டிற்கு செல்லுமாறு கூறியதோடு, சந்தேகமாக இருப்பதால் அவருடன் வந்த இளம்பெண்ணை தானே வீட்டிற்கு பாதுகாப்பாக அழைத்துவருவதாக கூறி மிரட்டி அனுப்பியுள்ளார் 



 

மேலும் மகேஷ்குமாரின் செல்போன் மற்றும் 11 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துகொண்டதோடு அவருடைய ஏடிஎம் பின் நம்பரையும் கேட்டு வாங்கியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை வந்து மொபைல் போனையும் வாங்குமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து இளம்பெண்ணை தனது வாகனத்தில் அழைத்துசென்று விபச்சார வழக்கு பதிவு செய்துவிடுவேன் என கூறி வணிக வளாகம் ஒன்றில் அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து மகேஷ்குமாரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 30ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட இளம்பெண் காலை தனது வீட்டில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.



 

இதனையடுத்து பெண்ணின் வீட்டிற்கு சென்ற மகேஷ்குமார் பெண்ணிடம் கேட்டபோது சனிக்கிழமை இரவில் காவலர் முருகன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததை கூறியுள்ளார். இதனையடுத்து இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து பணத்தையும் திருடிய காவலர் முருகனை கைது செய்ய கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் கடை உரிமையாளரான மகேஷ்குமார்  திலகர்திடல் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.  இதனையடுத்து இந்த புகார் மனுவை தொடர்ந்து காவலர் முருகன் மீது மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் காவலர் முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவருகிறது.



 

இரவில் பொதுமக்களை பாதுகாப்பதாக கூறி வாகன சோதனையில் ஈடுபட்ட காவலரே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து பணத்தையும் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இரவில் சினிமா பார்த்துவிட்டு திரும்பும் நபர்களை காவல்துறையினர் பரிசோதனை என்ற பெயரில் இரவில் மிரட்டி பணம் பறிப்பதாகவும், இரவில் பெண்களுடன் செல்லும் நபர்களை பொய்வழக்கு பதிவு செய்வதாக கூறி பணத்தை பறிப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருகின்றன.