சிவகங்கை மாவட்டத்தில் கடைக்கோடி பகுதியான சிங்கம்புணரியில்  கிராமங்கள் ஏராளம். விவசாயம் செழித்த இப்பகுதியில், கள்ளழகரின் பச்சை பட்டாய் கண்கண்ட இடங்கள் எல்லாம் பசுமையாகத் தெரியும். தென்னை, கடலை, கத்தரி என விவசாயம் செழித்த இவ்வூரில் சேவுகப்பெருமாள், வாத்தியார் ஐயா கோயில், செகுட்டை அய்யனார் கோயில் என அனைத்தும் பிரபலம். சிங்கம்புணரியில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது எஸ்.கோவில்பட்டி. இங்கு தான் கஷ்டங்களுக்கு செவி கொடுக்கும் செகுட்டை அய்யனார் கோயில் உள்ளது.



 

பச்சை கொடி படர்ந்த காட்டுக்குள் தான் மீசை முறுக்கிய செகுட்டை அய்யனார் அழகாய் அமைந்துள்ளார். அவருக்கு என்று கோயில் கோபுரம் இல்லை, மாளிகை இல்லை, கருவறை இல்லை ஆனாலும் சுத்துபட்டு கிராமத்தின் ராஜா அவர்தான்.  சினிமா லொக்கேசன் கூட தோற்றுவிடும் அந்த அளவிற்கு அழகை தன்னகத்து கொண்டிருக்கிறது அய்யனார் கோயில். அய்யனார் குளித்து விளையாட கோயிலுக்கு முன் ஒரு பெரிய குளமே உள்ளது. இந்த குளத்தை கிராம மக்கள் தீர்த்தமாக கருதுகின்றனர். குடி தண்ணீராகவும், உணவு சமைக்கவும் இந்த நீரை தான் கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். அய்யனாருக்கு இந்த நீரில் தான் அபிஷேகம் என்பதால் குளத்தில் சுத்தம் பேணுகின்றனர்.



ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் காது வளர்க்க வேண்டும் என்பது ஐதீகம். செகுட்டை அய்யனார் வள்ளிக் கிழங்கு தோண்டும் போது கிடைத்துள்ளார். கிழங்கு தோண்டும் போது அவரின் காதில் ஆயுதங்கள் பட்டு காயம் ஏற்பட்டுவிட்டதாம். ரத்தம் தெறித்து கிழங்கு தோண்டிய முன்னோர்களின் கண்களே பறிபோனதாம். அதனால் அய்யனாரிடம் மன்னிப்பு கேட்ட மக்கள், எல்லோரும் காது வளர்க்கும் பழக்கத்தை கடைபிடிக்கிறோம், என வேண்டிக் கொண்டனராம். மக்களை மன்னித்த அய்யனார், வெளிச்சம் கொடுத்து அந்த காட்டுக்குள்ளேயே அருள் வழங்குகிறார். அய்யனாருக்கு கோயில் கோபுரம் இல்லை என்பதால் கிராம மக்கள் யாரும் மாடி எடுத்து வீடு  கட்டிக் கொள்வதில்லை. அப்படியே மச்சுவீடு கட்டினாலும் படி வைத்துக் கட்டுவதில்லை என்கின்றனர் கிராம மக்கள்.



 

அய்யனாருக்கு திருவிழா அமோகமாக நடைபெறும். சூரக்குடியில் இருந்த புரவி எடுத்து திருவிழா கொண்டாடுகின்றனர். மழைக்காலங்களில் பாசி படர்ந்த சின்னஞ்சிறு குதிரையின் அழகு அதன் திருவிழா கதை சொல்கிறது. பெரும் பூதங்களாய் தென்படும் கோவில் அமைப்பால் எல்லோரும் பயபக்தியாய் நடந்து கொள்கின்றனர். அழகான ஆன்மீக அனுபவம் பெற செகுட்டை அய்யனார் கோவிலுக்கு கண்டிப்பா ஒரு விசிட் அடிங்க.



மேலும் கோவில்பட்டி கிராமத்தை செர்ந்த ராமன்...," மான் வேட்டை முடித்துவிட்டு எங்கள் முன்னோர்கள் வள்ளிக் கிழங்கு தோண்டியுள்ளனர். அப்போது ரத்தம் முகத்தில் வாரி இறைத்துள்ளது. கண் குருடான எங்கள் கிழவன் அங்கே மயங்கி நின்றுள்ளார். வள்ளிக் கிழங்கு தோண்டிய இடத்திற்கும், ஊருக்கும் நாய் ஒன்று கத்திக் கொண்டே வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து எங்கள் கிராம மக்கள் வள்ளிக்கிழங்கு தோண்டிய இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தான் சுயம்புலிங்கம் போல செகுட்டை அய்யனார் கிடைத்துள்ளார். அதை அங்கேயே பிரதிஸ்டை செய்து வணங்குகிறோம். அவர் தரையில் இருப்பதால் மாட மாளிகை கட்டுவதில்லை. காரைவீடு கட்டினாலும் மாடிப்படி கூட எடுக்க மாட்டோம். அவர் தச்சுருவான தெய்வம் கேட்டதை கொடுப்பார். " என்றார் பிரமிப்பாக.



 

 கிராமத்தில் பெண் சாந்தி....," குழந்தை பிறந்த 4 மாசத்துல கூட காது வளக்க ஆரம்பிச்சிருவோம். வீட்டுல நாலு பிள்ளைகள்னாலும் பிணுக்குப் போட்டு காது வளக்க வச்சுருவோம். காதுல துளைபோட்ட உடனே துணி வச்சு கட்டிருவோம். அப்ரம் வேப்பங்குச்சி, நெட்டித் தட்டைனு ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு மாதிரி மருந்து வைப்போம். எங்க ஊர்ல இப்படி காது வளக்குறது தான் பெருமை.



 

அய்யனாருக்கு வைகாசி மாசம் திருவிழா கட்டுவோம். அப்புடி அம்சமா இருக்கும். குதிரை சூரக்குடில செஞ்சு கொண்டுவருவோம். 15 நாள் திருவிழா அம்புட்டு அழகா இருக்கும். அய்யனார நினைச்சு வேண்டிக்கிட்டா எல்லாத்துக்கும் நல்ல மாலை எடுத்துக் கொடுப்பார்" என்றார்.