மதுரையில் பேருந்து நிலையத்தில் கர்ப்பிணிப் பெண் மயங்கி விழுந்து திடீர் பிரசவம். பிறந்த நொடியே ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஓய்வு எடுத்த கர்ப்பிணி

 

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவரின் மனைவி பிரவீனா (37). கர்ப்பிணியான இவர் உறவினரை பார்ப்பதற்காக மதுரை வந்த நிலையில், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் 4- வது தடத்தில் உள்ள பயணிகள் ஓய்வறையில்  படுத்து சிறிது நேரம் ஓய்வெடுத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் எழுந்தபோது உடல் சோர்வடைந்து மயக்கம் ஏற்பட்டு கீழே தடுமாறி தரையிலே விழுந்துள்ளார். கீழே  விழுந்ததில் வயிற்றில் உள்ள தண்ணீர் குடம் உடைந்து அங்கேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. கீழே விழுந்ததில் பச்சிளம் குழந்தைக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

 


 

பரிதாபமாக பச்சிளம் குழந்தை இறப்பு

 

இதை கண்ட உடனே அருகில் உள்ளவர்கள் 108 க்கும் மாட்டுத்தாவணி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். பின் ஆம்புலன்ஸ் மூலமாக தாயையும் பச்சிளம் குழந்தையும் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்ட போது பரிதாபமாக பச்சிளம் குழந்தை இறந்துள்ளது. அரசு ராஜாஜி மருத்துவமனையில் பரிசோதித்த போது 8 மாதமே ஆன நிலையில் திடிரென   முன்கூட்டியே குழந்தை பிறந்ததால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்த பச்சிளங் குழந்தையின் உடலை உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மாட்டுத்தாவணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து நிலையத்தில் 8 மாத கர்ப்பிணி பெண் மயங்கி விழுந்து   திடீரென பிரசவம் ஏற்பட்டு பச்சிளம் குழந்தை பிறந்த நொடியே இறந்த சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.