Supreme Court Notice: குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு; வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
குடியரசுத் தலைவர் மசோதாக்களுக்கான ஒப்புதலுக்கான காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு, ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பது தொடர்பாக, காலக்கெடுவை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, 14 கேள்விகளை முன்வைத்தார். அது தொடர்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று விசாரித்த நிலையில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
எதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
மசோதாக்கள் மீது முடிவெடுக்க, குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டது குறித்து, குடியரசுத் தலைவர் சார்பில் விளக்கம் கேட்டு வழக்கு தொடரப்பட்டது.
அதில், குடியரசுத் தலைவர் கேட்டிருந்த 14 கேள்விகளுக்கு பதிலளிப்பது குறித்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா, அதுல் சந்துர்கள் ஆகிய 5 பேர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான விரிவான விசாரணை, ஆகஸ்ட் 2-ம் வாரத்தில் தொடங்கும் என அறிவித்த நீதிபதிகள், மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
குடியரசுத் தலைவர் கேட்ட கேள்விகள் என்ன.?
இந்திய அரசியலமைப்பின் 200-வது பிரிவின் கீழ், ஒரு மசோதா ஆளுநருக்கு சமர்ப்பிக்கப்படும்போது, அவருக்கு இருக்கும் அரசியலமைப்பு விருப்பங்கள் என்ன?.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 200-ன் கீழ், ஒரு மசோதாவை தாக்கல் செய்யும்போது, அமைச்சர்கள் குழு வழங்கும் உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்படுகிறாரா?.
இந்திய அரசியலமைப்பின் 200-வது பிரிவின் கீழ், ஆளுநர் அரசியலமைப்பு விருப்புரிமையை பயன்படுத்துவது நியாயமானதா?.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 200-ன் கீழ், ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பாக நீதித்துறை மறுஆய்வுக்கு இந்திய அரசியலமைப்பின் பிரிவு 361 முழுமையான தடையா?.
அரசியலமைப்பு ரீதியாக, நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசமும், ஆளுநரால் அதிகாரங்களை பயன்படுத்தும் முறையும் இல்லாத நிலையில், இந்திய அரசியலமைப்பின் 200-வது பிரிவின் கீழ் உள்ள அனைத்து அதிகாரங்களையும் ஆளுநரால் பயன்படுத்துவதற்கு, நீதிமன்ற உத்தரவுகள் மூலம் காலக்கெடுவை விதிக்க முடியுமா?.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 201-ன் கீழ், குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயமானதா?
அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் குடியரசுத் தலைவர் அதிகாரங்களை பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில், இந்திய அரசியலமைப்பின் 201-வது பிரிவின் கீழ், குடியரசுத் தலைவரின் விருப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுகள் மூலம் காலக்கெடுவை விதிக்க முடியுமா?.
குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை நிர்வகிக்கும் அரசியலமைப்புத் திட்டத்தின் வெளிச்சத்தில், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 143-ன் கீழ், குடியரசுத் தலைவர், ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகவோ அல்லது வேறு விதமாகவோ ஒதுக்கும்போது, உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையையும், கருத்தையும் பெற வேண்டுமா?
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 200 மற்றும் பிரிவு 201-ன் கீழ், ஆளுநர் மற்றும் ஜனாதிபதியின் முடிவுகள், சட்டம் அமலுக்கு வருவதற்கு முந்தைய கட்டத்தில் நியாயப்படுத்தப்படுமா? ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, எந்த வகையிலும் அதன் உள்ளடக்கங்கள் மீது நீதிமன்றங்கள் நீதித்துறை தீர்ப்பை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறதா?.
இந்திய அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ், அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவதையும், குடியரசுத் தலைவர்/ஆளுநர் உத்தரவுகளையும் எந்த வகையிலும் மாற்ற முடியுமா?.
மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம், இந்திய அரசியலமைப்பின் 200-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் நடைமுறையில் உள்ள சட்டமா?.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 145(3)-ன் விதிமுறையைக் கருத்தில் கொண்டு, இந்த மாண்புமிகு நீதிமன்றத்தின் எந்தவொரு அமர்வும், அதன் முன் நடவடிக்கைகளில் உள்ள கேள்வி, அரசியலமைப்பின் விளக்கம் தொடர்பான கணிசமான சட்டக் கேள்விகளை உள்ளடக்கியதா என்பதை முதலில் முடிவு செய்து, குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதை பரிந்துரைப்பது கட்டாயமில்லையா?.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 142 இன் கீழ் உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்கள் நடைமுறைச் சட்டம் அல்லது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 142 தொடர்பான விஷயங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளதா? அரசியலமைப்பின் அல்லது நடைமுறையில் உள்ள சட்டத்தின் தற்போதைய அடிப்படை அல்லது நடைமுறை விதிகளுக்கு முரணான அல்லது முரண்பாடான உத்தரவுகளை பிறப்பித்தல்/ஆணைகளை பிறப்பித்தல் வரை நீட்டிக்கப்படுகிறதா?.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 131-ன் கீழ் வழக்குத் தொடருவதைத் தவிர, மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையிலான மோதல்களை தீர்ப்பதற்கு, உச்சநீதிமன்றத்தின் வேறு எந்த அதிகார வரம்பையும் அரசியலமைப்பு தடைசெய்கிறதா.?.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக, மேற்கண்ட கேள்விகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பியிருந்தார்.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றிய பல்வேறு மசோதாக்கள், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவைகள் மீது முடிவெடுக்காமல் அவர் இழுத்தடித்து வந்தார். இதையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு ஒரு மாதம் வரையும், குடியரசுத் தலைவருக்கு 3 மாதம் வரையிலும் காலக்கெடு விதித்து கடந்த ஏப்ரல் 8-ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு தொடர்பாக, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 14 கேள்விகளை உச்சநீதிமன்றத்திடம் கேட்டிருந்தார். இந்த நிலையில், அது தொடர்பான வழக்கு, அரசியல் சாசன தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.





















