உங்கள் எண்ணத்தை மட்டுமல்ல வாழ்க்கையையே கூட இந்தத் தொடர் மாற்றலாம்.


குரூப் 4 பாடத்திட்டத்தின் பொதுத்தமிழ் இலக்கியத்தில் உள்ள 10 பகுதிகளைப் படித்து முழு மதிப்பெண்களைப் பெறுவது எப்படி என்று கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்‌ தொண்டும்‌ பகுதியை எவ்வாறு படிக்க வேண்டும் என்று இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம். 


குரூப் 4 தேர்வில் உள்ள பொதுத்தமிழ் பகுதி மொத்தம் 3 பிரிவுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் ஆகியவையே அவை. இந்த 3 பகுதிகளில் இருந்தும் தலா 30 கேள்விகள் வீதம் 90 கேள்விகள் கேட்கப்படும். மீதமுள்ள 10 கேள்விகள் எப்படி வேண்டுமானாலும் கேட்கப்படலாம். அதனால் 3 பகுதிகளுக்கும் அதிக கவனம் கொடுத்துப் படிக்க வேண்டும். 


தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்‌ தொண்டும்‌ பாடத்திட்டம்


1. பாரதியார்‌, பாரதிதாசன்‌, நாமக்கல்‌ கவிஞர்‌, கவிமணி தேசிக விநாயகனார்‌ தொடர்பான செய்திகள்‌, சிறந்த தொடர்கள்‌, சிறப்புப்‌ பெயர்கள்‌.


2. மரபுக்‌ கவிதை - முடியரசன்‌, வாணிதாசன்‌, சுரதா, கண்ணதாசன்‌, உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்‌, மருதகாசி தொடர்பான செய்திகள்‌, அடைமொழிப்‌ பெயர்கள்‌.


3. புதுக்கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, இ.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன்‌, அப்துல் ரகுமான்‌, கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன்‌ - தொடர்பான செய்திகள்‌, மேற்கோள்கள்‌, சிறப்புத்‌ தொடர்கள்‌ மற்றும்‌ எழுதிய நூல்கள்‌.


4. தமிழில்‌ கடித இலக்கியம்‌ - நாட்குறிப்பு, ஜவகர்லால்‌ நேரு, மகாத்மா காந்தி, மு.வரதராசனார்‌, பேரறிஞர்‌ அண்ணா தொடர்பான செய்திகள்‌.


5. நிகழ்கலை (நாட்டுப்புறக்‌ கலைகள்‌) தொடர்பான செய்திகள்‌.


6. தமிழில்‌ சிறுகதைகள்‌ தலைப்பு - ஆசிரியர்‌ - பொருத்துதல்‌.


7. கலைகள்‌ - சிற்பம்‌ - ஓவியம்‌ - பேச்சு - திரைப்படக் கலை தொடர்பான செய்திகள்‌.


8. தமிழின்‌ தொன்மை - தமிழ்மொழியின்‌ பிறப்பு, திராவிட மொழிகள்‌ தொடர்பான செய்திகள்‌.


9. உரைநடை - மறைமலை அடிகள்‌, பரிதிமாற்கலைஞர்‌, ந.மு.வேங்கடசாமி நாட்டார்‌, ரா.பி.சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார்‌, வையாபரி, பேரா.தனிநாயகம்‌ அடிகள்‌, செய்குதம்பி பாவலர்‌ - மொழிநடை தொடர்பான செய்திகள்‌.


10. உ.வே.சாமிநாதர்‌, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்‌, சி.இலக்குவனார்‌ - தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்‌.


11. தேவநேயப்பாவாணர்‌- அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார்‌, தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள்‌.


12. ஜி.யு.போப்‌ - வீரமாமுனிவர்‌ தமிழ்த்தொண்டு சிறப்புத்‌ தொடர்கள்‌.


13. தந்தை பெரியார்‌ - பேரறிஞர்‌ அண்ணா -முத்துராமலிங்கர்‌ - அம்பேத்கர்‌- காமராசர்‌ -ம.பொ.சிவஞானம்‌ - காயிதே மில்லத்‌ - சமுதாயத்‌ கொண்டு.


14. தமிழகம்‌ - ஊரும்‌ பேரும்‌, தோற்றம்‌ மாற்றம்‌ பற்றிய செய்திகள்‌.


15. உலகளாவிய தமிழர்கள்‌ சிறப்பும்‌ - பெருமையும்‌ - தமிழ்ப்‌ பணியும்‌.


16. தமிழ் மொழியின்‌ அறிவியல்‌ சிந்தனைகள்‌ தொடர்பான செய்திகள்‌.


17. தமிழ்‌ மகளிரின்‌ பிறப்பு - மூவலூர்‌ ராமாமிர்தம்மாள்‌, டாக்டர்‌ முத்துலட்சுமி அம்மையார்‌, வேலு நாச்சியார்‌ மற்றும்‌ சாதனை மகளிர்‌ - விடுதலைப்‌ போராட்டத்தில்‌ மகளிர்‌ பங்கு - தில்லையாடி‌ வள்ளியம்மை, ராணி மங்கம்மாள்‌, அன்னி பெசன்ட்‌ அம்மையார்‌.


18. தமிழர்‌ வணிகம்‌ - தொல்லியல்‌ ஆய்வுகள்‌ - கடற்‌ பயணங்கள்‌ - தொடர்பான செய்திகள்‌.


19. உணவே மருந்து - நோய்‌ தீர்க்கும்‌ மூலிகைகள்‌ தொடர்பான செய்திகள்‌.


20. சமயப்‌ பொதுமை உணர்த்திய தாயுமானவர்‌, இராமலிங்க அடிகளார்‌, திரு.வி.கல்யாண சுந்தரனார்‌ தொடர்பான செய்திகள்‌ - மேற்கோள்கள்‌.


21. நூலகம்‌ பற்றிய செய்திகள்‌.


மேலே குறிப்பிட்டபடி, தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்‌ தொண்டும்‌ பகுதியில் மொத்தம் 21 பிரிவுகள் உள்ளன. அதில் முதல் 10 பகுதிகளை எப்படிப் படித்தால் மதிப்பெண்களை அள்ளலாம் என்று முதலில் பார்க்கலாம். இதுகுறித்து விளக்குகிறார் தமிழினியன் பயிற்சி மையத்தின் நிறுவனர் நித்யா பிரபு.




1. பாரதியார்‌, பாரதிதாசன்‌, நாமக்கல்‌ கவிஞர்‌, கவிமணி தேசிக விநாயகனார்‌ தொடர்பான செய்திகள்‌, சிறந்த தொடர்கள்‌, சிறப்புப்‌ பெயர்கள்‌.


இதில் பாரதியாரும் பாரதிதாசனும் தமிழ்த் திரைத் துறையில் எம்ஜிஆர் - சிவாஜிபோல. தமிழ் அறிஞர்கள் பகுதியில் தவிர்க்க முடியாதவர்கள். நாமக்கல்‌ கவிஞர்‌, கவிமணி ஆகிய இருவரும் ரஜினி -கமல்போல. 


பாரதியார்


பாரதியார் குறித்து அனைத்து பாடப்புத்தகங்களிலும் கேள்வி - பதில்கள் உள்ளன. அவர் குறித்து அனைத்துத் தேர்வுகளிலும் கேள்விகள் கேட்கப்படும். இவர் பற்றி புதிய 6ஆம் வகுப்பு முதல் பருவம், 8ஆம் வகுப்பு முதல் பருவம், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. 7, 9ஆம் வகுப்புகள் தவிர்த்து மீதமுள்ள 5 புத்தகங்களிலும் பாரதியார் குறித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாரதியாருக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை அறியலாம். 


பாரதியாரின் சிறப்புகள், அவர் இயற்றிய நூல்கள், அவரைப் பற்றிய குறிப்புகள், பாரதி எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்தார்? ( பெண்ணுரிமைக்காகவும் மண்ணுரிமைக்காகவும் குரல் கொடுத்தவர்), பாரதியின் புகழ்பெற்ற மேற்கோள்கள் ஆகியவற்றைப் படிக்க வேண்டியது அவசியம். 


பாரதி - பாரதிதாசன் வேறுபாடு


இருவருக்குமான அடிப்படை வித்தியாசத்தை முதலில் தேர்வர்கள் உணர வேண்டும். உணர்ச்சிகரமாகப் பேசுவதும் இயற்றுவதும் பாரதியின் வழக்கம். அவரை விடுதலைக் கவி என்றும் அழைக்கிறோம். காணி நிலம் வேண்டும், நல்லதோர் வீணை செய்வோம், காக்கைக் சிறகினிலே நந்தலாலா என்று ஆசிரியப் பாவில் அதிகம் உணர்ச்சி பொங்கப் பாடியவர் பாரதி. 


தமிழ், தமிழர் என்று பேசுவது பாரதிதாசனின் பழக்கம். பொதுவுடைமை சார்ந்த கவிதைகள் அவரின் பாடல்களில் அதிகம் இருக்கும். 6ஆம் வகுப்பு முதல் பருவம், 7ஆம் வகுப்பு முதல் பருவம், 9ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு என 4 பாடப் புத்தகங்களில் பாரதிதாசனைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாடத்துக்குப் பின்னால் மொழித்திறன் வளர் பயிற்சி உண்டு, அதில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படலாம். பாரதியார் குறித்த கேள்விகளைப் போலவே பாரதிதாசன் பற்றியும் படித்தால், எளிதாகக் கேள்விகளுக்கு விடையளிக்கலாம்.  


நாமக்கல்‌ கவிஞர்- கவிமணி தேசிக விநாயகனார்‌  


நாமக்கல் கவிஞரை காந்தியக் கவிஞர் என்பர். இவர் காந்தியின் சித்தாந்தத்தில் ஊறித் திளைத்தவர். கத்தியின்றி, ரத்தமின்று யுத்தமொன்று வருகுது என்பது மாதிரியான பாடல்களைப் பாடியவர். இவரைப் பற்றிய குறிப்புகள் 7ஆம் வகுப்பு முதல் பருவப் பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.


 



நாமக்கல்‌ கவிஞர்


கவிமணி தேசிக விநாயகனார்‌ தமிழ் சார்ந்து இயங்கியவர். இவர் சார்ந்த பாடல்கள் 6ஆம் வகுப்பு 2வது பருவம் மற்றும் 8ஆம் வகுப்பு முதல் பருவப் பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. கவிமணி தேசிக விநாயகனாரின் படைப்புகள் முக்கியமானவை. மலரும் மாலையும், ஆசிய ஜோதி, உமர் கய்யாம் பாடல்கள் ஆகிய நூல்கலை எழுதியுள்ளார். உமர் கய்யாம் பாடல்களில் இருந்து கேள்விகள் அடிக்கடி கேட்கப்பட்டுள்ளது. அதேபோல ஆசிரியர் குறிப்பு, நூல் குறிப்பு, படைப்புகள், பிரபல மேற்கோள்களைப் படிக்க வேண்டும். 


2. மரபுக்‌ கவிதை - முடியரசன்‌, வாணிதாசன்‌, சுரதா, கண்ணதாசன்‌, உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்‌, மருதகாசி தொடர்பான செய்திகள்‌, அடைமொழிப்‌ பெயர்கள்‌.


மேற்குறிப்பிட்டோர் மரபுக் கவிதைகள் மூலம் தமிழை வளர்த்தவர்கள். புதிய பாடப்புத்தகத்தில் இவர்கள் அனைவர் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சொன்னதுபோல இந்த அறிஞர்களின் சிறப்புகள், குறிப்புகள், நூல்கள், நூல் குறிப்பு, படைப்புகள், பிரபல மேற்கோள்களைப் படிக்க வேண்டும். 


முடியரசன் குறித்து 6ஆம் வகுப்பு 2ஆம் பருவத்தில் வருகிறது. வாணிதாசன் 8ஆம் வகுப்பு 1ஆம் பருவத்தில் வருகிறார். அதேபோல சுரதா 7ஆம் வகுப்பு 1ஆம் பருவத்திலும், கண்ணதாசன் 7ஆம் வகுப்பு 3ஆம் பருவத்திலும் 10ஆம் வகுப்பிலும் வருகின்றனர். கண்ணதாசன் மரபுக் கவிதை மற்றும் திரைத்துறை ஆகிய இரண்டிலும் வருவதால் மிகவும் முக்கியமானவர். அவர் குறித்துத் தெளிவாகப் படிக்க வேண்டும். 


 உடுமலை நாராயண கவி 7ஆம் வகுப்பு 1ஆம் பருவத்திலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்‌ 6ஆம் வகுப்பு 2ஆம் பருவத்திலும் வருகின்றனர். திரைக்கவி திலகம் என்று போற்றப்படும் மருதகாசி பழைய 7 ஆம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவை எல்லாவற்றிலும் தமிழ் அறிஞர்கள் இயற்றிய நூல்களுக்கும் அவர்களைப் பற்றிய குறிப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டும். 


 



கண்ணதாசன்


3. புதுக்கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, இ.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன்‌, அப்துல் ரகுமான்‌, கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன்‌ - தொடர்பான செய்திகள்‌, மேற்கோள்கள்‌, சிறப்புத்‌ தொடர்கள்‌ மற்றும்‌ எழுதிய நூல்கள்‌.


வழிவழியாகப் பாடப்படுபவை மரபுக் கவிதைகள். எழுத்து இலக்கணங்களைப் பின்பற்றி மரபுக் கவிதைகள் இருக்கும். புதுக்கவிதைகள் மரபுக் கவிதைகளில் இருந்து வேறுபட்டு, வசன வடிவம் கொண்டவை. யாப்பு இலக்கணங்களுக்கு அப்பால் பாடப்படுபவை. நவீன காலத் தமிழ் இலக்கியங்களில் முக்கியமானவை. 


இவற்றை எழுதிய ந.பிச்சமூர்த்தி 9ஆம் வகுப்பு 3ஆம் பருவத்தில் வருகிறார். சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா மற்றும் இரா.மீனாட்சி ஆகிய நால்வரும் 11ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் வருகின்றனர். இ.மணி, சிற்பி பாலசுப்பிரமணியம் ஆகிய இருவரும், 12ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் வருகின்றனர். மு.மேத்தா 8ஆம் வகுப்பு 3ஆம் பருவத்தில் வருகிறார். ஈரோடு தமிழன்பன் 9ஆம் வகுப்பிலும்‌, அப்துல் ரகுமான் 11ஆம் வகுப்பிலும் வருகின்றனர்‌. கல்யாண்ஜி 9ஆம் வகுப்புப் புத்தகத்தில் வருகிறார்.


கலாப்ரியா மற்றும் ஞானக்கூத்தனின் படைப்புகள் புதிய, பழைய பாடப்புத்தகங்கள் இரண்டிலும் இல்லை. இதற்கு முனைவர் தேவிரா எழுதிய கலைக்களஞ்சியம் என்ற புத்தகத்தில் எடுத்துப் படிக்க வேண்டும். 


4. தமிழில்‌ கடித இலக்கியம்‌ - நாட்குறிப்பு, ஜவகர்லால்‌ நேரு, மகாத்மா காந்தி, மு.வரதராசனார்‌, பேரறிஞர்‌ அண்ணா தொடர்பான செய்திகள்‌.


நாட்குறிப்பு  (டயரி எழுதுதல்) பற்றிய பகுதி 11ஆம் வகுப்புப் புத்தகத்தில் வருகிறது. அனந்தரங்கர் நாட்குறிப்பு என்னும் பாடம் முன்பு இருந்தது, அது தற்போது நீக்கப்பட்டுவிட்டது. அனந்தரங்கர் போர்த்துக்கீசியப் படையில் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர். அவர் தினந்தோறும் நாட்குறிப்பு எழுதினார். அந்தக் காலத்தில் நடந்தவற்றுக்கு அவை சான்றாகத் திகழ்கின்றன. அதனால், அனந்தரங்கர் நாட்குறிப்பு, நாட்குறிப்புக்கு முன்னோடியாக உள்ளது. 


ஜவகர்லால்‌ நேரு, தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் பற்றிய குறிப்புகள், பழைய 6ஆம் வகுப்புப் புத்தகத்தில் வருகிறது. காந்தி எழுதிய கடிதங்கள் புதிய 6ஆம் வகுப்பு 3ஆம் பருவத்திலும், பழைய 7ஆம் வகுப்பிலும் வருகின்றன. மு.வரதராசனாரின் கடிதங்கள் பழைய 9ஆம் வகுப்புப் புத்தகத்தில் வருகின்றன. 


பேரறிஞர்‌ அண்ணா புதிய 9ஆம் வகுப்புப் புத்தகத்திலும் பழைய 10ஆம் வகுப்புப் புத்தகத்திலும் வருகிறார். அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள் என்ற பெயரில் அவை இருக்கும்.


நாட்குறிப்பில் அனந்தரங்கர், அவரின் நாட்குறிப்புகள் குறித்த கேள்விகள் கேட்கப்படலாம். பிற தலைவர்கள் எழுதிய கடிதத்தின் சாராம்சங்களில் இருந்து கேள்விகள் வர வாய்ப்புண்டு. 




5. நிகழ்கலை (நாட்டுப்புறக்‌ கலைகள்‌) தொடர்பான செய்திகள்‌.


இதில் இருந்து நிச்சயம் 1 கேள்வி வரும். 10ஆம் வகுப்புப் புத்தகத்தில் அனைத்துவிதமான நிகழ்கலைகளும் வந்துள்ளன. கரகாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம், தேவராட்டம், கூத்து உள்ளிட்ட நாட்டுப்புறக்‌ கலைகளே நிகழ்கலைகள் எனப்படுகின்றன. இந்தப் பகுதியில் இருந்து கரகாட்டத்தில் எதை எதைத் தலையில் வைத்துக்கொண்டு ஆடுவர் என்பது மாதிரியான  நாட்டுப்புறக்‌ கலைகள் குறித்த தகவல்களைக் கேட்கலாம். 


6. தமிழில்‌ சிறுகதைகள்‌ தலைப்பு - ஆசிரியர்‌ - பொருத்துதல்‌.


6 முதல் 12ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு பாடப்புத்தகத்திலும் கொடுக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தலைப்பையும் ஆசிரியர்களையும் படித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு சிறுகதையையும் யார் எழுதினார், அதன் தலைப்பு ஆகியவற்றில் இருந்தே கேள்விகள் இருக்கும்.  


7. கலைகள்‌ - சிற்பம்‌ - ஓவியம்‌ - பேச்சு - திரைப்படக் கலை தொடர்பான செய்திகள்‌.


பேச்சு, சிற்பம், திரைப்படம், ஓவியம் உள்ளிட்ட கலைகள் குறித்த பொதுவான பாடங்கள் அனைத்தும் 11ஆம் வகுப்புப் புத்தகத்தில் உள்ளன. சிற்பக் கலை குறித்த பாடம் 9ஆம் வகுப்பில் உள்ளது. ஓவியக் கலை குறித்த பாடம் 7ஆம் வகுப்பு 2ஆம் பருவத்தில் உள்ளது. பேச்சுக் கலை 7ஆம் வகுப்பு 1ஆம் பருவத்திலும் 11ஆம் வகுப்பிலும் வருகிறது. 


திரைப்படக் கலை தொடர்பான பாடங்கள் 11, 12ஆம் வகுப்புகளில் வருகின்றன. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து 11ஆம் வகுப்பில் வந்துள்ள குறிப்புகளையும் திரைப்படக் கலையில் சேர்த்துப் படிக்க வேண்டும். இதில் ஆயகலைகள் எத்தனை, கலைகளின் முதல், முடிவு எப்படி அமைய வேண்டும், கோயில் சிற்பங்கள், குடைவரைச் சிற்பங்கள், ஓவிய நிலைகள் எப்படி இருந்தன என்பது மாதிரியான கேள்விகள் கேட்கப்படலாம்.


8. தமிழின்‌ தொன்மை - தமிழ்மொழியின்‌ பிறப்பு, திராவிட மொழிகள்‌ தொடர்பான செய்திகள்‌.


தமிழ் மொழி குறித்துப் பாடப் புத்தகங்களில் எங்கெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிறதோ, அதையெல்லாம் படிக்க வேண்டும். தென், நடு, வட திராவிட மொழிகள் என மொத்தம் 24 திராவிட மொழிகள் உள்ளன. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளே திராவிட மொழிகள் ஆகும். இவை குறித்து பழைய, புதிய 9ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. திராவிட மொழிகள், அதை ஆராய்ச்சி செய்தவர்கள் யார் யார், சிந்து சமவெளி நாகரிகம், தமிழ் மொழி ஆட்சி மொழியாக உள்ள நாடுகள் என்பன மாதிரியான கேள்விகள் இதில் கேட்கப்படலாம். 




9. உரைநடை - மறைமலை அடிகள்‌, பரிதிமாற்கலைஞர்‌, ந.மு.வேங்கடசாமி நாட்டார்‌, ரா.பி.சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார்‌, வையாபரி, பேரா.தனிநாயகம்‌ அடிகள்‌, செய்குதம்பி பாவலர்‌ - மொழிநடை தொடர்பான செய்திகள்‌.


தங்களின் கருத்துகளை வழக்கமான எழுத்து நடையில் எழுதும் வடிவமே உரைநடை. தனித்தமிழ் வகையில் சிறப்பாக எழுதிய மறைமலை அடிகள்‌ குறித்த செய்திகள் 12ஆம் வகுப்புப் புத்தகத்தில் உள்ளன. மொழித்திறன் வளர் பயிற்சியிலும் மறைமலை அடிகள் குறித்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழுக்கு குறிப்பிட்ட இடம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய பரிதிமாற்கலைஞர் பற்றிப் புதிய 12ஆம் வகுப்பிலும் பழைய 10ஆம் வகுப்பிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ந.மு.வேங்கடசாமி நாட்டார்‌ 12ஆம் வகுப்புப் புத்தகத்தில் வருகிறார். சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை 7ஆம் வகுப்பு 1ஆம் பருவத்தில் வருகிறார்.


திரு.வி.கல்யாண சுந்தரனார்‌


இவர் மிக மிக முக்கியமானவர். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து பங்காற்றி இருக்கிறார். தமிழ்த் தென்றல் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். திருவிக குறித்து 8ஆம் வகுப்பு 2ஆம் பருவத்திலும் 11ஆம் வகுப்பிலும் பழைய 9ஆம் வகுப்பிலும் வந்துள்ளது.


வையாபரி குறித்து பள்ளி பாடத்திட்டத்தில் எதுவும் கொடுக்கப்படவில்லை. முன்னரே குறிப்பிட்ட தேவிரா புத்தகத்தில் இருந்து படித்துக்கொள்ள வேண்டும். உலகெங்கும் தமிழைப் பரப்பிய பேரா.தனிநாயகம்‌ அடிகள் பற்றி 9ஆம் வகுப்புப் புத்தகத்திலும்‌, செய்குதம்பி பாவலர்‌ பற்றி 10ஆம் வகுப்புப் புத்தகத்திலும் உள்ளது. இவர்கள் அனைவர் பற்றியும் புத்தகத்தில் இருக்கும் தகவல்களைப் படித்தால் போதும். தேர்வில் எளிமையாக அதிக மதிப்பெண்கள் பெறலாம். 




10. உ.வே.சாமிநாதர்‌, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்‌, சி.இலக்குவனார்‌ - தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்‌.


இவர் குறித்த கேள்விகள் கேட்கப்படலாம். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட பண்டைய ஓலைச் சுவடிகளைக் கண்டுபிடித்து, அச்சுக்குப் பதிப்பித்தவர் உ.வே.சா. அதனாலேயே அவர் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படுகிறார். உ.வே.சாமிநாதர் குறித்த தகவல்கள் பழைய 6ஆம் வகுப்புப் புத்தகத்தில் 3 பக்கத்துக்கு உள்ளன. அதைத் தேடித் தெளிவாகப் படித்தாலே போதும்.


தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் குறித்த தகவல்கள் 11ஆம் வகுப்புப் புத்தகத்தில் உள்ளன. இவர் கூறிய மேற்கோள்கள், நூல்கள் குறித்துப் படிக்க வேண்டியது அவசியம். சி.இலக்குவனார்‌ குறித்த தகவல்கள் பள்ளி பாடப்புத்தகத்தில் இல்லை. தேவிரா புத்தகத்தில் இலக்குவனார் இருப்பார். அதைப் படித்தால் போதும்.


தமிழ் அறிஞர்களின் தொண்டு பாடத்திட்டத்தில் முக்கியமாகப் படிக்க வேண்டியவை 3. நூலாசிரியர்களின் பிரபல மேற்கோள்கள், அவர்கள் இயற்றிய நூல்கள், அவர்கள் தமிழ் மொழிக்காகச் செய்த செயல்கள் ஆகியவற்றைத் தெளிவாக உள்வாங்கிப் படித்தால் போதும். எளிதாக மதிப்பெண்களைப் பெற முடியும். 


தமிழ் அறிஞர்களின் தொண்டு பகுதியில் முதல் 10 பகுதிகளைப் பார்த்தோம். மீதமுள்ள பகுதிகளைப் படிப்பது எப்படி?


- பார்க்கலாம்.


-க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramanip@abpnetwork.com


முந்தைய அத்தியாயங்களையும் வாசிக்கலாம்..


TNPSC Exam Preparation: உள்ளங்கையில் அரசுப் பணி 7: தமிழ் இலக்கியத்தில் 100 மதிப்பெண்கள் சாத்தியமே!


TNPSC Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 6: தமிழ் இலக்கியம்...முக்கியத்துவமும் வெல்லும் வழிமுறைகளும்! 


TNPSC Group 4 Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 5: தமிழ் இலக்கணம் இனி எளிது... இனிது..!


TNPSC Group 4 Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 4: மதிப்பெண்களை அள்ள முத்தான பத்து- பொதுத்தமிழ் இலக்கணம் ஒரு பார்வை


TNPSC Preparation | உள்ளங்கையில் அரசுப்பணி 3: பொதுத்தமிழில் 100-க்கு 100 பெறுவது எப்படி?


TNPSC Exam Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 2: முதல் முயற்சியிலேயே வெல்வது எப்படி?


TNPSC Govt Jobs | உள்ளங்கையில் அரசுப் பணி 1: இன்னும் ஏன் இந்த தாமதம்?