குரூப் 4 பாடத்திட்டத்தின் பொதுத்தமிழ் இலக்கியத்தில் உள்ள 5 பகுதிகளைக் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். மீதமுள்ள 5 பகுதிகளைப் படித்து முழு மதிப்பெண்களைப் பெறுவது எப்படி?


இதுகுறித்து விளக்குகிறார் தமிழினியன் பயிற்சி மையத்தின் நிறுவனர் நித்யா பிரபு.


6. பெரிய புராணம்‌ - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்‌ - திருவிளையாடல் புராணம்‌ - தேம்பாவணி - சீறாப்புராணம்‌ தொடர்பான செய்திகள்‌.


பெரிய புராணம் தொடர்பான செய்திகள்‌ 9-ம் வகுப்புப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இறைவன் சிவனைக் குறித்தும் சிவனடியார்கள் பற்றியும் விளக்கும் சைம சமய நூல் பெரியபுராணம். இதை இயற்றியவர் சேக்கிழார். அவர் பற்றிய குறிப்புகள், நூல் குறிப்புகள், பாடல் வரிகளைப் படிக்க வேண்டும். 


சுந்தரர் ஒரே அடியில் சிவனடியார்களின் பெருமையைப் பாடும் நூலே திருத்தொண்டத்தொகை. அதைச் சிறிது விரித்து எழுதப்பட்டதே நம்பியாண்டார் நம்பியால் எழுதப்பட்ட நூலே திருத்தொண்டர் திரு அந்தாதி. இந்த இரு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். 63 அடியார்களின் சிறப்பை ஒவ்வொரு புராணத்திலும் ஒருவரென விளக்கி எழுதப்பட்ட நூல் இது. இதைத் திருத்தொண்டர் புராணம் என்றும் அழைக்கின்றனர். ப்


நாலாயிர திவ்வியப் பிரபந்த செய்திகள்‌ 7ஆம் வகுப்பு 3ஆம் பருவப் புத்தகத்தில் உள்ளன. திருமால் பற்றிப் பாடப்படும் வைணவ சமய நூல் இது. இந்த நூலை 12 ஆழ்வார்கள் பாடியுள்ளனர். இதில், பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார் ஆகியோரை முதல் ஆழ்வார்கள் என்பர். இவர்கள் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். 


திருவிளையாடல் புராணம்‌ :


திருவிளையாடல் புராணத்தில் இருந்து அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன. புதிய 10ஆம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் இது இடம்பெற்றுள்ளது. இதுவும் சிவனைப் பற்றிக் குறிப்பிடும் நூல். இந்நூலை பரஞ்சோதி முனிவர் இயற்றி உள்ளார். இதில் உள்ள மேற்கோள்கள், முக்கியமான வரிகள், மதுரையைப் பற்றிய குறிப்புகளைப் படிக்க வேண்டியது முக்கியம்.


தேம்பாவணி 


யேசு கிறிஸ்து பற்றிய இந்த சமய நூலை இயற்றியவர் வீரமா முனிவர். புதிய 10ஆம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் இதுதொடர்பான செய்திகள் இடம்பெற்றுள்ளன. தேம்பாவணி நூலின் பாட்டுடைத் தலைவன் யார் என்று கேட்கலாம். அதற்கு யேசு கிறிஸ்து என்பது சரியான பதிலல்ல. சூசையப்பர் என்பதே சரி. வீரமா முனிவரின் இயற்பெயர், அவர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர், அவரின் பிற நூல்கள் என்னென்ன என்ற கேள்விகளை எதிர்பார்க்கலாம். வழக்கம்போல, நூலின் மேற்கோள்கள், முக்கியமான வரிகளைப் படிப்பது முக்கியம். 


சீறாப்புராணம்‌ தொடர்பான செய்திகள்:


இஸ்லாம் சமயத்தைப் பற்றியும் நபிகள் நாயகம் குறித்தும் சொல்லப்படும் நூல். இது 11ஆம் வகுப்புப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் உள்ள 3 காண்டங்கள், 92 படலங்கள், 5077 பாடல்கள் குறித்துத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த நூலை இயற்றிய உமறுப் புலவர் கடிகை முத்துப்புலவரின் மாணவர் ஆவர். சீதக்காதி, அப்துல் காசிம் மரைக்காயர் ஆகியோர் உமறுப் புலவரை ஆதரித்தனர். 


7. சிற்றிலக்கியங்கள் - திருக்குற்றாலக் குறவஞ்சி, கலிங்கத்துப் பரணி - முத்கொள்ளாயிரம்‌, தமிழ்விடு தூது - நந்திக் கலம்பகம்‌ - முக்கூடற்பள்ளு - காவடிச்சிந்து -முத்துக்குமாரசாமி பிள்ளைத்‌ தமிழ்‌ - இராஜராஜ சோழன்‌ உலா தொடர்பான செய்திகள்‌.


சிற்றிலக்கியங்கள் பகுதி முக்கியமானது. இதில் இருந்து அடிக்கடி கேள்விகள் வந்துகொண்டே இருக்கும். 


திருக்குற்றாலக் குறவஞ்சி : 


குறவஞ்சி என்பது நாடக இலக்கிய வடிவம். அதாவது பாட்டுடைத் தலைவன் உலா வரக்கண்ட தலைவி, அத்தலைவன் மீது காதல் கொள்ள, குறவன் குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி குறி கூறிப் பரிசில் பெறுவதுதான் குறவஞ்சி நூலின் அடிப்படை வடிவம். குறவன் - குறத்தி பற்றிய கதைகளைச் சொல்லி, குற்றாலத்தின் சிறப்புகளைக் கூறும் நூலே திருக்குற்றாலக் குறவஞ்சி. இதை இயற்றியவர் திரிகூட ராசப்ப கவிராயர். அவரின் சிறப்புகள், இயற்றிய நூல்கள் (திருக்குற்றாலத்தின் தலபுராணம், மாலை, சிலேடை) குறித்து 11ஆம் வகுப்புப் புத்தகத்தில் உள்ளது.


கலிங்கத்துப் பரணி :


பரணி என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிகொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியமே பரணி. தமிழில் எழுதப்பட்ட முதல் பரணி கலிங்கத்துப் பரணி.


சோழ மன்னனுக்கும் கலிங்க மன்னனுக்கும் இடையே நடைபெற்ற போரில் சோழ மன்னன் வெற்றி பெற்றிருப்பார். கலிங்க மன்னர் தோற்றிருப்பார். வழக்கமாக வென்றவரின் பெயரில்தான் நூல்கள் இயற்றப்படும். ஆனால் தோற்றவரின் பெயரைக் கொண்டு இயற்றப்படும் நூல் பரணி. இதனால் கலிங்கத்துப் பரணி என்று பெயர்பெற்ற நூலை ஜெயங்கொண்டார் இயற்றி உள்ளார். 


பெயரில் தோற்றவர் இருந்தாலும், சிறப்புகள் அனைத்தும் வென்றவரைப் பற்றியே இருக்கும். அதேபோல கலிங்கப் படையின் நடுக்கமும் அவர்கள் தோற்று, சிதறியோடிய அனுபவங்களும் இதில் இருக்கும். கலிங்கத்துப் பரணி தொடர்பான செய்திகள் 8ஆம் வகுப்பு 3ஆம் பருவத்தில் உள்ளன. 


முத்கொள்ளாயிரம்‌ :


சேர, சோழ, பாண்டியர்கள் என மூன்று வகையான மன்னர்களைப் பற்றி மொத்தம் 900 பாடல்களைப் பாடிய நூலே முத்கொள்ளாயிரம்‌. இதில் பாடல்கள் முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. 108 பாடல்கள் மட்டும்தான் கிடைத்துள்ளன. எனினும் நூல் குறிப்புகளைக் கொண்டு 900 பாடல்கள் இருந்ததை அறியலாம். இந்த நூல் குறித்த செய்தி, பாடல் வரிகள் புதிய 9ஆம் வகுப்புப் புத்தகத்தில் உள்ளன. முத்கொள்ளாயிரம்‌ பகுதியில் இருந்தும் கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன. 


தமிழ்விடு தூது :



தமிழைத் தூது விட்டு எழுதப்பட்ட நூலே தமிழ்விடு தூது. இது வாயில் இலக்கியம், சங்க இலக்கியம் என்று இரண்டு பெயர்களில் அழைக்கப்படுகிறது. அஃறிணைப் பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமையும் இலக்கியம் தூது இலக்கியம் எனப்படுகிறது. தலைவன் தலைவியிடம் மாலையை வாங்கி வரும்படி தூது அனுப்புவதே தூது இலக்கியம். இதில் அன்னம் தொடங்கி 10 பொருட்கள் தூதாக அனுப்பப்படும். தூது கலி வெண்பாவால் இயற்றப்பட்ட நூல். 


மதுரை சொக்கநாதர் மீது அன்புகொண்ட பெண் ஒருத்தி, தமிழ் மொழியையே தூதாக அனுப்புவதே தமிழ்விடு தூது. இந்த நூல் 268 கண்ணிகளைக் (கண்ணி - 2 அடிப் பாடல்) கொண்டுள்ளது. இந்த நூலை இயற்றியவர் பெயர் தெரியவில்லை. முதலில் பதிப்பித்தவர் உ.வே.சாமிநாதையர். புதிய 9ஆம் வகுப்புப் புத்தகத்தில் இதன் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 


நந்திக் கலம்பகம்‌ :



கலம் - 6. பகம் - 12. இரண்டையும் சேர்த்து கலம்பகம் - 18 உறுப்புகளால் அமைக்கப்பட்டு பாடப்பட்டுள்ளது கலம்பகம். 3ஆம் நந்தி வர்மனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட நூல் நந்திக் கலம்பகம்‌. பழைய 10ஆம் வகுப்புப் புத்தகத்தில் உள்ளது. 


முக்கூடற்பள்ளு :



3 நதிகள் கூடும் இடமே முக்கூடல். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொருநை ஆற்றங்கரையில் முக்கூடல் என்ற நகரம் உள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள அழகர் பெருமானைப் போற்றி இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. பாடல் வரிகள், இயற்றியவர் குறித்து பழைய 7ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் உள்ளது. 


காவடிச்சிந்து :


முருகனுக்குக் காவடி எடுத்துக்கொண்டு சென்று தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றும்படி கூறிப் பாடுவதே காவடிச்சிந்து. இந்த இலக்கியம் பாடத்திட்டத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. தேர்விலும் இதில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அண்ணாமலையார் இந்த நூலை எழுதியுள்ளார். இவர்தான் காவடிச்சிந்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். நூல், ஆசிரியர் சிறப்புகள், மேற்கோள்களை பழைய 8ஆம் வகுப்புப் புத்தகத்தில் படிக்கலாம். 


முத்துக்குமாரசாமி பிள்ளைத்‌ தமிழ்‌ :



பிள்ளைத்‌ தமிழ்‌ என்பது கடவுளையோ, மன்னரையோ, மக்களில் சிறந்தவரையோ குழந்தையாக பாவித்து, அவர்களின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளைப் பாடுவதாகும். இது ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இரண்டு பால்களிலும் பாடப்படும். இது காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனப் பத்துப் பருவங்களாகப் பாடப்படுகிறது.  


முத்துக்குமாரசாமி எனப்படும் முருகப் பெருமானைக் குழந்தையாக பாவித்து குமரகுருபரரால் இயற்றப்பட்ட நூலே முத்துக்குமாரசாமி பிள்ளைத்‌ தமிழ்.‌ பருவத்துக்கு 10 பாடல்கள் வீதம் 100 பாடல்கள் இதில் உள்ளன. வழக்கம்போல பாடல் வரிகள், பாட்டுடைத் தலைவன், நூல் குறிப்புகளைப் படிக்க வேண்டும். இதுகுறித்த செய்தி புதிய 10ஆம்  வகுப்புப் புத்தகத்தில் உள்ளது. 


இராஜராஜ சோழன்‌ உலா :


இராஜராஜன் உலா என்னும் சிற்றிலக்கியம் ஒட்டக்கூத்தர் என்னும் புலவரால் பாடப்பட்டது. இந்த நூலில் 391 கண்ணிகள் உள்ளன. இதில் சோழர்களுக்குச் செலுத்த வேண்டிய வரியை சேரன் கட்ட மறுத்ததால், சோழர்கள் சேரன் மீது படை எடுத்ததாகவும் அதில், சோழர் படை வென்றதையும் நூல் கூறுகிறது.  


10ஆம் வகுப்புப் புத்தகத்தில் மெய்க்கீர்த்தி என்ற பெயரில் இரண்டாம் ராஜராஜ சோழனின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. அவர் எப்படி ஆட்சிபுரிந்தார் என்றும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். 


8. மனோன்மணியம்‌ - பாஞ்சாலி சபதம்‌ - குயில்‌ பாட்டு - இரட்டுற மொழிதல்‌ (காளமேகப்‌ புலவர்‌) - அழகிய சொக்கநாதர்‌ தொடர்பான
செய்திகள்‌.


மனோன்மணியம் :


மனோன்மணியம்‌ என்பது மனோன்மணி என்பவரின் கதையை நாடக வடிவில் கூறும் நூல். பா வடிவில் அமைந்திருக்கும். இலக்கண வடிவில் எழுத்து, அசை, சீர்,தளை, அடி, தொடை ஆகிய அனைத்தும் அமைந்திருக்கும். யாப்பு இலக்கணத்தை வைத்து உரையாடல் வடிவத்தில் எழுதப்பட்ட முதல் நூல் இது. இதில் இருந்து அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்த நூலை மனோன்மணியம் பெ.சுந்தரனார் எழுதியுள்ளார். இந்த நூலில் இடம்பெற்றுள்ள "நீராருங் கடலுடுத்த நிலமடந்தை" என்ற பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாகத் தமிழ்நாட்டில் ஒலிக்கிறது.


லிட்டன் பிரபு எழுதிய ரகசிய வழி என்னும் நூலைத் தழுவி தமிழில் எழுதப்பட்டது. இது ஆசிரியப்பாவால் அமைந்த நூல். இதில் சிவகாமியின் சரிதம் என்ற கிளைக்கதை உள்ளது. அதில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. 


மனோன்மணியம் பெ.சுந்தரனார் பிறந்து வளர்ந்தது, பணியாற்றியது, சென்னை பல்கலை. அவருக்கு வழங்கிய பட்டம், நெல்லையில் அவருக்கு செய்யப்பட்ட சிறப்புகள் குறித்தும் படித்துக்கொள்ள வேண்டும். 


பாஞ்சாலி சபதம்‌ :


மகாபாரதத்தில் பாஞ்சாலி குறித்து இடம்பெற்றுள்ள கதைகளைத் தழுவித் தமிழில் பாரதியார் இயற்றியதே பாஞ்சாலி சபதம். இந்தப் பாடல்கள் பழைய 9ஆம் வகுப்புப் புத்தகத்தில் உள்ளன. பாரதியார் குறித்தும் படிக்க வேண்டியது அவசியம். 


குயில்‌ பாட்டு :



மாலைப் பொழுதில் குயிலின் ஓசை கேட்டு, குயிலாகவே மாறி பாரதியார் இயற்றிய பாடல்களே குயில் பாட்டு. பழைய பாடப்புத்தகங்களில் இந்தப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.


இரட்டுற மொழிதல்‌ (காளமேகப்‌ புலவர்‌) 
ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுறமொழிதல் எனப்படும். இரண்டு + உற + மொழிதல் -  இது தனிப்பாடல்களில் இடம் பெற்றுள்ளது. 


உதாரணத்துக்கு, முத்தமிழ் துய்ப்பதால், முச்சங்கம் கண்டதால்.


முத்தமிழ் துய்ப்பதால்
---------------


முத்தமிழ்= மூன்று+தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று முத்தமிழைக் கொண்டது தமிழ் மொழி.


முத்தமிழ் = முத்து+அமிழ் என முத்தையும் அமிழ்தையும் கடல் நமக்குத் தருகிறது.



முச்சங்கம் கண்டதால்
-----------------


முச்சங்கம்= மூன்று+சங்கம் - முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகிய மூன்று சங்கங்கள் கூடி தமிழை வளர்த்தன.


முச்சங்கம் = மூன்று+சங்கு+அம் - அழகிய வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைக் கடல் தருகிறது.


ஒரே வரி இரண்டு பொருளைத் தருவதால், இது இரட்டுற மொழிதல் எனப்படுகிறது.


இது புதிய 7ஆம் வகுப்பு 2ஆம் பருவத்திலும், 10ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.


அழகிய சொக்கநாதர்‌ தொடர்பான செய்திகள்‌


பள்ளிப் புத்தகத்தில் மொழித்திறன் வளர் பயிற்சிக்குப் பின்னால் அவர் இயற்றிய பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்தால் போதுமானது.



9. நாட்டுப்புறப்‌ பாட்டு :


இது புதிய 10ஆம் வகுப்புப் புத்தகத்தில் உள்ளது. கரகாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகள் குறித்து நிகழ்கலை என்று உரைநடையாகவே கொடுக்கப்பட்டுள்ளது. 


சித்தர்‌ பாடல்கள்‌ தொடர்பான செய்திகள்‌:


இது மிகவும் முக்கியமான பகுதி. கேள்விகள் அடிக்கடி கேட்கப்படும் பகுதி. 18 சித்தர்கள் பற்றிய குறிப்புகளோடு, சித்தர் உலகம் என்ற தனிப்பாடமே புத்தகத்தில் உள்ளது. 11ஆம் வகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளதைப் படித்தால் போதுமானது.




10. சமய முன்னோடிகள்‌ - அப்பர்‌, சம்பந்தர்‌, சுந்தரர்‌, மாணிக்கவாசகர்‌, திருமூலர்‌, குலசேகர ஆழ்வார்‌, ஆண்டாள்‌, சீத்தலைச்‌ சாத்தனார்‌,
எச்‌.ஏ.கருட்மணனார்‌, உமறுப்புலவர்‌ தொடர்பான செய்திகள்‌, மேற்கோள்கள்‌, சிறப்புப்‌ பெயர்கள்‌.


அப்பர்‌, சம்பந்தர்‌, சுந்தரர்‌, மாணிக்கவாசகர்‌ :


இவர்கள் நால்வரும் சைவ சமயக் குறவர்கள். இவர்கள் குறித்து புதிய 8, 11, 12ஆம் வகுப்புப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அப்பர் (திருநாவுக்கரசர்) பற்றி பழைய 10ஆம் வகுப்பில் உள்ளது. மொத்தம் 12 சைவத் திருமுறைகள் உள்ளன. முதல் 3ஐ திருஞானசம்பந்தர் எழுதி இருப்பார். அடுத்த 3ஐ திருநாவுக்கரசர் இயற்றி இருப்பார். 7- சுந்தரரும் 8- மாணிக்கவாசகரும் பாடினர். 9ஆம் திருமுறையை மொத்தம் 9 பேர் இயற்றினர். 10- திருமூலர் இயற்றிய திருமந்திரம். (திருமூலர் குறித்து 8ஆம் வகுப்பு 3ஆம் பருவத்தில் இடம்பெற்றுள்ளது). 11ஆம் திருமுறையை 12 பேர் இயற்றியிருப்பர். 12ஆம் திருமுறையே பெரியபுராணம். இதை சேக்கிழார் எழுதியுள்ளார். 


குலசேகர ஆழ்வார் :


இவர் குறித்தும் திருமால் குறித்த இவரின் பாடல் வரிகளும் புதிய 10ஆம் வகுப்புப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 


ஆண்டாள்:


ஆண்டாள் இயற்றிய திருப்பாவை குறித்து புதிய 9ஆம் வகுப்புப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 


சீத்தலைச்‌ சாத்தனார்‌:


ஏற்கெனவே பவுத்த சமய நூலான மணிமேகலை குறித்துப் படிக்கும்போது சீத்தலைச்‌ சாத்தனார்‌ குறித்தும் படித்திருப்போம். 


எச்‌.ஏ.கருட்மணனார்‌ (எச்.ஏ.கிருஷ்ணப் பிள்ளை)


கிறிஸ்துவ சமயத்தைப் பற்றி ரட்சணிய யாத்திரிகம் என்ற நூலை எழுதியவர் இவர். இவர் குறித்து புதிய 10,12ஆம் வகுப்புப் புத்தகங்களில் படிக்கலாம்.


ஏற்கெனவே 11ஆம் வகுப்புப் புத்தகத்தில் படித்த சீறாப்புராணத்தில், அதை எழுதிய உமறுப்புலவர்‌ தொடர்பான செய்திகள்‌, மேற்கோள்கள்‌, சிறப்புப்‌ பெயர்களைப் படிக்க வேண்டிய அவசியம்‌.




முதுமொழிக் காஞ்சி, திரிகடுகம், இனியவை நாற்பது, இன்னா நாற்பது, ஏலாதி ஆகிய 5 பகுதிகளுக்கு மட்டும் பழைய புத்தகங்களைப் படிக்க வேண்டும். அதேபோல சிற்றிலக்கியங்களில் நந்திக் கலம்பகம், முக்கூடற்பள்ளு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு ஆகியவற்றையும், பழைய புத்தகங்களில் படித்தால் போதுமானது.


மற்றபடி புதிய புத்தகங்களைத் தெளிவாகப் படித்தால், எளிதாக இலக்கியப் பகுதியில் முழு மதிப்பெண்களை அள்ளலாம். 


பொதுத்தமிழ் பாடத்திட்டத்தின் 3-வதும் கடைசிப் பகுதியுமான தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் பகுதியைப் படிப்பது எப்படி?


- பார்க்கலாம்..


-க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramanip@abpnetwork.com


முந்தைய அத்தியாயங்களையும் வாசிக்கலாம்..


TNPSC Group 4 Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 5: தமிழ் இலக்கணம் இனி எளிது... இனிது..!


TNPSC Group 4 Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 4: மதிப்பெண்களை அள்ள முத்தான பத்து- பொதுத்தமிழ் இலக்கணம் ஒரு பார்வை


TNPSC Preparation | உள்ளங்கையில் அரசுப்பணி 3: பொதுத்தமிழில் 100-க்கு 100 பெறுவது எப்படி?


TNPSC Exam Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 2: முதல் முயற்சியிலேயே வெல்வது எப்படி?


TNPSC Govt Jobs | உள்ளங்கையில் அரசுப் பணி 1: இன்னும் ஏன் இந்த தாமதம்?