சேலம் மாவட்டம் உருவாக்கப்பட்டு 234 ஆண்டாகிறது.தமிழகத்திலேயே சென்னை, கோவை, மதுரை, திருச்சிக்கு அடுத்து 5வது பெரிய மாவட்டமாக சேலம் உள்ளது.

Published by: ஜான்சி ராணி

மலைகள் சூழ்ந்த மாநகரமான சேலம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நகரமாகும். ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த சேலம்,முன்பு 1792 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் தேதி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் முதல் மாவட்டமாக உருவானது.

ஆங்கிலேய படைகளுக்கும் திப்பு சுல்தானுக்கும் இடையில் நடைபெற்ற போரின் முடிவாக ஸ்ரீரங்கப்பட்டணத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு முதல் மாவட்ட ஆட்சியராக அலெக்சாண்டர் ரீட் நியமிக்கப்பட்டார்.

சேலம் மாவட்டத்தில் விளையும் 'மல்கோவா மாம்பழம்' மிகவும் சிறப்பு வாய்ந்தது. 1937 இல் இந்தியாவிலேயே முதல்முறையாக மதுவிலக்கு அமல்படுத்தியது சேலம் மாவட்டத்தில்தான்.

சேலம் ரயில்வே ஜங்ஷன் நடைமேடை இந்தியாவிலேயே மிக நீளமானது. பிரதான தொழிலாக விளங்குவது கைத்தறி, ஜவ்வரிசி உற்பத்தி, வெள்ளி கொலுசுகள் ஆகும்

ஏற்றுமதியை பொறுத்தவரை ஜவ்வரிசி, பட்டு ஆடைகள், பூ வகைகள், வெள்ளி கொலுசுகள், தேங்காய் நார் கயிறுகள் என பலவகையான பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.

மிகவும் பழமையான வழிபாட்டுத் தலங்கள் இருக்கிறது. உலகின் மிக உயரமான முருகன் சிலை அமைந்துள்ள முத்துமலை முருகன் கோவில், கோட்டை மாரியம்மன் திருக்கோவில், கோட்டை அழகிரிநாதர் திருக்கோவில்,

தாரமங்கலம் சிவன் கோவில், திப்பு சுல்தான் கட்டிய ஜாமா மஜ்ஜிட், மாவட்டத்தில் மத்தியில் அமைந்துள்ள சிஎஸ்ஐ பேராலயம், குழந்தைகள் ஏசு பேராலயம்,

அயோத்தியாபட்டணம் ராமர் கோவில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், எருமாபாளையம் ராமானுஜர் மடம் சிறப்புவாய்ந்த வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.

இந்திய சுதந்திரப் போரில் முக்கிய பங்காற்றிய இடமாகவும் சேலம் திகழ்கிறது. இந்திய சினிமாவின் முன்னோடியாக திகழ்ந்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் இன்றைக்கும் சேலத்தின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.