ஆடிப் பௌர்ணமியையொட்டி அழகர்கோயில் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோயில் கதவுகள் திறக்கப்பட்டு, படி பூஜை நடைபெற்றது. பக்தர்களை காயம் ஏற்படுத்தும் வகையில் முள் வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த காவல்துறையினர்.

கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜை நடைபெற்றது.


மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள அழகர்கோயிலில் ஆடிப்பௌர்ணமியையொட்டி, வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி திருக்கோயில் கதவுகள் திறக்கப்பட்டு, படி பூஜை நடைபெற்றது. அழகர்கோவில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோவில் ஆடிப் பெருந்திருவிழா நடைபெற்று வருகின்றது, இதில் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றதைத் தொடர்ந்து, அழகர்கோயில் காவல் தெய்வமான விளங்கக்கூடிய பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி திருக்கோயிலில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் படி பூஜை நேற்று இரவு நடைபெற்றது. இதற்காக, பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி திருக்கோயிலில் உள்ள பதினெட்டு படிகளும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு கற்பூர ஜோதி ஏற்றபட்டதை தொடர்ந்து. பக்தர்களின் தரிசனத்திற்காக திருக்கோயில் கதவுகள் சிறிது நிமிடங்கள் மட்டும்  திறக்கப்பட்டது.

 


 

பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம்

 

அப்போது கூடியிருந்த திரளான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் இந்த தரிசனத்திற்காக பெண்கள், குழந்தைகள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில், காவல்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல் இருந்தது பக்தர்களை பெரிதும் சிரமத்திற்கு ஆளாக்கியது. மேலும், காவல்துறை சார்பில் பக்தர்களை ஒழங்குப்படுத்துவதற்காக வைக்கப்படும் இரும்பு தடுப்புகளில், முள்வேலி அமைத்து பக்தர்களை தடுத்ததால் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அதேபோல் திருக்கோயில், முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரும், திருக்கோவில் பணியாளர்களும் தாங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் தரிசனத்திற்கு அனுமதித்தது, பக்தர்களை பெரிதும் முகம் சுழிக்க வைத்தது குறிப்பிடதக்கது. ”இனிவரும் காலங்களில், இந்து சமய அறநிலையத்துறையும், மாவட்ட நிர்வாகமும், திருக்கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு உரிய ஆலோசனை வழங்கி பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்பதே பக்தர்களின் கோரிக்கையாக இருந்தது.