மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்ததலத்தில் எழுந்தருளியுள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியை தக்ஷனுடைய யாகத்தில் சாபம் அடைந்த பிரம்மதேவன் வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றதுடன், சூரபத்மன் மயில் உருவாய் பெற்ற பின் ஆறு திருமுகங்களைக் கொண்ட இம்முருக பெருமானை வணங்கி ஞான உபதேசம் பெற்று, மயில் வாகனமாக இருக்கின்ற ஸ்தலமாக இது விளங்கி வருகிறது.
இங்கு தக்ஷிணாமூர்த்தி தக்ஷண கோஷ்டத்தில் மயில் வாகனத்தில் அமர்ந்து ஞான குகனாக அருள் பாலிக்கிறார். இது வேறு எங்கும் இல்லாத தனி சிறப்பாகும். ஆறுமுகங்கள், பன்னிரு கரங்களுடன், கடம்ப மாலை, மதங்க அணிகலன்களுடன் முருக பெருமான் காட்சியளிக்கும் புண்ணிய தலமான இந்தகோயிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழா முதல் கால யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகள் பூர்ணாகுதி நடந்து விழாவின் முக்கிய நாளான கும்பாபிஷேக தினத்தில் ஆறாம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து. தொடர்ந்து பூரணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. தொடர்ந்து 9.30 மணியளவில் சிவாச்சாரியார்கள் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, ஆனந்தவல்லி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடத்தி வைத்தனர். பின்னர் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனுக்கு அரோகரா என்று பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் முருகேசன், ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் குலதெய்வக்காரர்கள், கிராமவாசிகள் கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க பெரம்பூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்