குழந்தை ரூ.3½ லட்சத்துக்கு விற்பனை - நாடகமாடிய தாய் கைது

திருச்சி மாவட்டம் , லால்குடி அருகே பிறந்த குழந்தையை ரூ.3½ லட்சத்துக்கு விற்று நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டார்.

Continues below advertisement

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் மங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ஜானகி (வயது 32). இதேபோல் லால்குடி அருகே அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (42). இவர் லால்குடி கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவரது இரண்டாவது மனைவி சண்முகவள்ளி (38). பிரபுவின் அலுவலகம் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ளது. இந்த அலுவலகத்துக்கு ஜானகி அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இதன் மூலம் ஜானகிக்கும், பிரபுவுக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஜானகி திருமணமாகாமலேயே முறையற்ற உறவால் கர்ப்பம் ஆனார். 7 மாத கர்ப்பிணியாக இருந்த ஜானகி, கருவை கலைக்க வக்கீல் பிரபு மற்றும் அவரது மனைவி சண்முகவள்ளி ஆகியோரை அணுகினார். இதனையடுத்து அவர்கள் குழந்தை பிறந்ததும், அதனை விற்றுவிடலாம் என முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஜானகிக்கு பெண் குழந்தை பிறந்ததை தொடர்ந்து, குழந்தையை பிரபுவிடம் ஒப்படைத்தார். பிரபு குழந்தையை ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு ஒருவரிடம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், பிரபு ரூ.1 லட்சத்துக்கு மட்டுமே விற்பனை செய்ததாகவும், அதில் தான் ரூ.20 ஆயிரத்தை எடுத்து கொண்டதாக தெரிவித்து, ஜானகியிடம் ரூ.80 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.

Continues below advertisement


இதனை தொடர்ந்து பணத்தை பெற்றுக் கொண்ட ஜானகி நகைகளை வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இதற்கிடையில் குழந்தையை ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு பிரபு, சண்முகவள்ளி ஆகியோர் விற்றது ஜானகிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜானகி குழந்தையை விற்ற தகவலை போலீசிடம் தெரிவிக்காமல் குழந்தையை பிரபுவிடம் கொடுத்ததாகவும், அதன்பின் காணாமல் போய்விட்டதாகவும், எனவே குழந்தையை கண்டுபிடித்து தரக்கோரியும் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். இது தொடர்பாக லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் புகார் கொடுத்த ஜானகி மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் ஜானகியின் விருப்பத்தின் பேரில் குழந்தையை பிரபு, அவரது மனைவி சண்முகவள்ளி ஆகியோர் சேர்ந்து ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்றது தெரியவந்தது. மேலும் ஜானகி குழந்தை காணாமல் போய்விட்டதாக நாடகமாடியதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானகியை கைது செய்தனர். மேலும் குழந்தை யாரிடம் விற்கப்பட்டது. குழந்தை விற்பனையில் யார், யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

Continues below advertisement
Sponsored Links by Taboola