திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சாட்டை துரை முருகனுக்கு முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

சாட்டை துரைமுருகனுக்கு முன் ஜாமின் மனு

 

சாட்டை துரைமுருகன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முன் ஜாமின் கோரி மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக, திருச்சி சைபர் கிரைம் போலீஸாரால், என்னை கைது செய்தனர். பின்னர் நீதிபதி சிறையில் அடைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் விடுதலை செய்தனர். கைது செய்யப்பட்டதற்கு எஸ்.பி. வருண்குமார்தான் காரணம் எனவும், விமர்சனங்களை சீமான் முன்வைத்திருந்தார். சமூக வலைதளங்களில் மோசமான கமெண்டுகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. இது தொடர்பாக வருண்குமார் எஸ்.பி யால் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருச்சி சைபர் கிரைம் போலீஸார் என்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 


 

இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.

 

அப்போது அரசு தரப்பு  வழக்கறிஞர்  கூறுகையில், சாட்டை துரை முருகன் உள்ளிட்டோர் மீது காவல் துறை அதிகாரி  வழக்கு பதிவு செய்து தனது கடமையை செய்தார் என்பதற்காக, திருச்சி SP வருண் குமார், மீது   சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவு செய்து வருகின்றனர். இது பணியில் உள்ள அதிகாரிகளை அச்சுறுத்தும் செயல். இவர்களை கைது செய்ய வேண்டும். எனவே இவர்களுக்கு ஜாமின் வழங்க கூடாது.  இவர்களை கைது செய்ய வேண்டும். எனவே இவர்களுக்கு ஜாமின் வழங்க கூடாது என அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

 


நாங்கள் பொறுப்பு இல்லை 

 


அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் பற்றி மனுதாரர் எந்த இடத்திலுஎந்த சமூக வலைத்தளங்களிலும் தவறாக பதிவிடவில்லை. வருண்குமார் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததற்கு சில நெட்டிசன்கள் அவதூறாக பதிவு செய்துள்ளனர். அதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை என வாதிட்டார்.

 

நெட்டிசன்கள் மீது நடவடிக்கை

 

இதை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் பதிவிடவில்லை. எனவே முன் ஜாமின் வழங்கப்படுகிறது. காவல் துறை அதிகாரிகள் குறித்தும், தவறாக பதிவிட்ட நெட்டிசன்கள் அனைவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.