நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அவர் நடித்துள்ள திரைப்படம்  இன்று உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. 


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜயின் 68 ஆவது படமாக உருவாகியுள்ள தி கோட் படத்தில் பிரபுதேவா, பிரசாந்த் , சினேகா, லைலா, மோகன், வைபவ், ஜெயராம், பிரேம்ஜி, மீனாக்‌ஷி செளத்ரி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


அரசியல் கட்சி தொடங்கிய பிறகு பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கிய தி கோட் இன்று உலகளவில் 5000 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் சிறப்புக் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படம் மிக பிரம்மாண்டமாக உள்ளது,  விறுவிறுப்புக்கு சிறிதளவு கூட பஞ்சமில்லை என தெரிவித்து வருகிறார்கள்.




திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திரையரங்குகளில் இன்று விஜய் நடித்துள்ள தி- கோட் படம் காலை 9 மணி அளவில் திரையிடப்பட்டது. நடிகர் விஜய் ரசிகர்கள் அதிகாலை முதல் திரையரங்கம் முன்பு அதிக அளவில் குவிந்தனர்.


நடிகர் விஜய் படம் திரையிடப்பட்டாலே தமிழ்நாடு மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் ரசிகர்கள் கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் எப்போது விஜய் படம் திரையிடப்பட்டாலும்,  ரசிகர்கள் அனைத்து திரையரங்குகள் முன்பு பட்டாசு வெடிப்பது, நடனம் ஆடுவது, இனிப்புகள் வழங்குவது, பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடிகர் விஜய் அவர்களுக்கு பேனர் வைப்பது, பால் அபிஷேகம் பண்ணுவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். குறிப்பாக திருச்சியில் நடிகர் விஜய் படம் வெளியிடப்பட்டாலே திருவிழா போன்று திரையரங்குகள்  காட்சி அளிக்கும். 




ஆனால் இன்று நடிகர் விஜய் நடித்துள்ள படம் தி கோட்,  திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. ஆனால் எந்த ஆரவாரமும், அலப்பறையும் இல்லாமல் விஜய் ரசிகர்கள் அமைதியான முறையில் திரையரங்குக்குள் சென்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


நடிகர் விஜய் ரசிகர்கள் கூறுகையில்.. 


நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு பல்வேறு எதிர்ப்புகளை கடந்து இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. ஆகையால் இந்தப் படத்தை படமாக பார்க்க வேண்டும்,அரசியல் நோக்கத்தோடு இந்த படத்தை யாரும் பார்க்கக் கூடாது என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.


மேலும் திரையரங்குகள் முன்பு பெரிய அளவில் கொண்டாட்டங்களோ, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் ரசிகர்கள் நடந்து கொள்ளக் கூடாது என நடிகர் விஜய் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டதாக ரசிகர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளதால் அதற்கான பணிகளில் ரசிகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஆகையால் மாநாடு என்பது மிகப் பிரமாண்டமாக இதுவரை தமிழ்நாட்டில் நடைபெறாத அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. ஆகையால் தற்போது எந்த பெரிய அளவில் கொண்டாட்டங்கள் நாங்கள் ஈடுபடவில்லை என ரசிகர்கள் தெரிவித்தனர்.