திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்ளும் நபர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 


அதே போன்று தொடர் கொலை,  கொள்ளை  சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்தும், அவர்களுக்கு உதவி செய்யும் நபர்களையும் கண்டறிந்து காலதாமதம் இல்லாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 


குறிப்பாக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். 


குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் இயங்கக்கூடிய பள்ளி மற்றும் கல்லூரிகள் ,பொதுமக்கள் அதிகமாக இருக்கக்கூடிய இடங்கள், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளின் அருகே அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் உடனடியாக கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மேலும் மாவட்டம் தோறும்  இருக்கக்கூடிய மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு போதை பொருள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 


போதைப்பொருள் பழக்கத்தால் இளைஞர்களின் எதிர்காலம் முற்றிலும் சீரழிந்து வருகிறது. ஆகையால் திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை போதைப்பொருள் இல்லாத நிலையை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென மாவட்ட எஸ்பி வருண்குமார் கூறியுள்ளார். 




திருச்சியில் 20 மூட்டை போதை பொருள் பறிமுதல்


இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து போதைப்பொருட்கள் பழக்கம் அதிகரித்து வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. 


இதனை இதனை குறித்து மாவட்டம் முழுவதும்  தனிப்படைகள் அமைத்து, தீவிர சோதனையில் ஈடுபட எஸ்பி. வருண்குமார் உத்தரவிட்டுள்ளார். 


அதன்படி போலீசார் 24 மணி நேரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். பல இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளி மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, முக்கொம்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் காரில் சுற்றிக்கொண்டிருப்பதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அவர்களின் உதவி எண் 9487464651 என்ற எண்ணிற்கு கிடைத்த தகவல் கிடைத்தது.




அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்த 3 பேர் கைது


இதனை தொடர்ந்து போலீசார் அந்த  பகுதிக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார்,  அவர்களின் உத்தரவின் பேரில், தனிப்படையினர் விரைந்து சென்று சோதனை செய்தனர். 


அப்போது அந்தப் பகுதியில் நின்று கொண்டு இருந்த சந்தேகத்தின் அடிப்படையில் காரை போலீசார் சோதனை செய்தனர். இந்நிலையில் காரில்  அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களான ஹான்ஸ், விமல் மற்றும் Cool-lip போன்றவை 20 மூட்டைகளில் இருந்துள்ளது.


அதன் மொத்த எடை சுமார் 152 கிலோ ஆகும். இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மணிராஜ், தங்க மாயன், பாலகிருஷ்ணாபுரம், ஆகியோரை கைது செய்தனர். மேலும் வாகனத்தையும், கைப்பற்றப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் அவர்களிடமிருந்த பணம் ரூ.96,420 ஆகியவற்றை ஜீயபுரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.


மேலும் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை யார் விற்பனை செய்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.