Just In





மாநகராட்சி வாகனத்தை சிறைப்பிடித்த தஞ்சை மக்கள்: எதற்காக தெரியுங்களா?
கரந்தை, பள்ளியக்ரஹாரம், வடக்குவாசல், மாரிக்குளம் ஆகிய இடங்களில் இந்த கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி விளார் ரோடு மாரிக்குளம் சுடுகாடு எதிரில் பாதாள சாக்கடை கழிவு நீர் அடிக்கடி சாலையில் ஓடியதால் சுகாதார சீர் கேடு ஏற்படுகிறது என்று தெரிவித்து மாநகராட்சி வாகனத்தை அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்து சாலைமறியல் செய்தனர்.
தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள 51 வார்டுகளிலும் உள்ள கழிவுநீரை சேகரிப்பதற்காக 4 இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கரந்தை, பள்ளியக்ரஹாரம், வடக்குவாசல், மாரிக்குளம் ஆகிய இடங்களில் இந்த கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கழிவுநீர் உந்து நிலையங்களில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் சமுத்திரம் ஏரியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு சுத்திகரிக்கப்பட்டு பாசனத்துக்கு தண்ணீர் விடப்படுகிறது. மேலும் மாநகரில் கழிவுநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆள்நுழைவு குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தஞ்சை விளார் ரோடு மாரிக்குளம் சுடுகாடு அருகே உள்ள சாலையில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் மாரிக்குளம் சுடுகாடு எதிரில் பாதாள சாக்கடை கழிவுநீர் அடிக்கடி சாலையில் வெளியேறி பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து மாநகராட்சி சார்பில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு பெரிய அளவிலான குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது .
இந்த குழாய் வழியாக பாதாள சாக்கடை கழிவுநீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. இந்த பணியால் சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது. இருப்பினும் இந்த பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டதால் சாலை சேதமடைந்தது. மேலும் கழிவு நீரும் சாலையில் வழிந்தோடி பள்ளங்களில் தேங்கி துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் நடந்ததால் இந்த வழியாக செல்லும் பஸ்களும் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த பழ. ராஜேந்திரன், வசந்த், ஜெயக்குமார், எஸ்.எம்.ராஜேந்திரன், முனியாண்டி, பிரகாஷ், சுரேஷ்குமார், ஆனந்தி உள்பட ஏராளமான பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மாநகராட்சி வாகனத்தையும் சிறை பிடித்து கோஷமிட்டனர். உடனடியாக பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதை தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். தகவலறிந்து மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதன் பின்னர் பொதுமக்கள் சாலை மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 4 மாதமாக இவ்வாறு அடிக்கடி நடக்கிறது. இப்பகுதியில் குழந்தைகள், முதியவர்கள் அதிகம் உள்ளனர். இந்த கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தால் உடன் சரி செய்கிறோம் என்று கூறுகின்றனர். ஆனால் பணிகள் முடியவில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் உடன் இப்பணிகளை முடித்து சாலையை சீரமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.