உண்டுருமி கிடாக்குளம் பகுதி பிராமணர்க்கு தானமாக கொடுக்கப்பட்டிருந்த காலத்தில் இந்த வாமனக்கல் அதன் அடையாளமாக வைக்கப்பட்டிருக்கலாம்.

 

திருச்சுழி அருகே 300 ஆண்டுகள் பழமையான வாமனக்கல் கண்டுபிடிப்பு


 

மன்னர் காலத்தில், கோயில் வழிபாட்டுக்காக விளைநிலத்தின் வரியை நீக்கி அவற்றை கோயில்களுக்கு தானமாக வழங்குவர். நிலத்தின் விளைச்சல் மூலம் வழிபாடு தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு தானம் வழங்கிய சிவன் கோயில் நிலத்தில் திரிசூலக்கல்லும், திருமால் கோயில் நிலத்தில் சங்கு சக்கரம் பொறித்த திருவாழிக்கல்லும் நடுவர்.

 

வாமனக்கல்


 

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி திருப்புவனம் சாலையில் திருச்சுழி அருகிலுள்ள உண்டுருமி கிடாக்குளத்தில், சாலையின் இடதுபுறம் இருந்த ஒருங்கமைவு இல்லாத வாமனக்கல்லை, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் ராஜபாண்டி ஆகியோர் ஆய்வு செய்தனர். இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறுகையில், “உண்டுருமி கிடாக்குளத்தில், 1½ அடி உயரமும், ஒரு அடி அகலமும் கொண்ட ஒருங்கமைவு இல்லாத கல்லில், மார்பில் முப்புரி நூல், வலது கையில் குடை, இடதுகையில் கமண்டலத்துடன் திருமாலின் ஐந்தாம் அவதாரமான வாமன பிராமண உருவமும், அதன் மேற்பகுதியில் சூரியன், சந்திரனும் கோட்டுருவங்களாக வரையப்பட்டுள்ளன. இதை வாமனக்கல் என்பர்.

 

கலைச்சொல் அகரமுதலியும் உறுதிப்படுத்துகிறது.


 

தமிழ்நாடு முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வாமனக்கற்கள் திருமால் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைக்கல் என தவறாக சொல்லப்படுகிறது. திருமால் கோயில் நிலத்துக்கு திருவாழிக்கல் நடுவது தான் வழக்கம். திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் குண்டூர், மீரான்குளம், சுத்தமல்லி  ஆகிய ஊர்களில் பிராமணருக்கு நிலதானம் கொடுத்த கல்வெட்டுகளில் வாமன உருவமும் உள்ளது. சிவகங்கை மாவட்டம் பிராமணக்குறிச்சியில் அக்கிரகாரம் அமைத்துக் கொடுத்த வாணாதிராயர் கல்வெட்டில், கமண்டலமும், திரிதண்டமும் கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளன. வாமன பிராமண உருவம், கமண்டலம், சூரியன், சந்திரன் ஆகிய அடையாளங்களைக் கொண்டு, வாமனக்கல் என்பது பிராமணருக்கு தானமாக வழங்கிய பிரம்மதேய நிலத்தில் நடப்பட்ட அடையாளக் கல் எனலாம். இதை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்ட கல்வெட்டு கலைச்சொல் அகரமுதலியும் உறுதிப்படுத்துகிறது.

 

300 ஆண்டுகள் பழமையானதாக கருதலாம்


 

பாண்டியர், சோழர் காலத்தில் வழங்கப்பட்ட பிரம்மதேய நிலங்களில் வாமனக்கல் வைக்கும் வழக்கம் இல்லை. அதன் பிறகு பிரம்மதேய நிலங்கள் பிறரால் ஆக்கிரமிக்கப்பட்டதன் காரணமாக இவ்வழக்கம் கி.பி.16-ம் நூற்றாண்டுக்குப் பிறகு உருவாகியுள்ளது. இவை பெரும்பாலும் ஒருங்கமைவு இல்லாத கற்களில், வாமன உருவம் கோட்டுருவமாக வரையப்பட்ட நிலையில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் புடைப்புச் சிற்பமாக உள்ளது. உண்டுருமி கிடாக்குளம் பகுதி பிராமணர்க்கு தானமாக கொடுக்கப்பட்டிருந்த காலத்தில் இந்த வாமனக்கல் அதன் அடையாளமாக வைக்கப்பட்டிருக்கலாம். இதை சுமார் 300 ஆண்டுகள் பழமையானதாக கருதலாம்" எனத் தெரிவித்தார்.