தஞ்சாவூர்: தமிழக அரசு கர்நாடகத்திற்கு அழுத்தம் தந்து காவிரி நீர் பெற வேண்டும் என்று விவசாயிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார்.

வேளாண் இணை இயக்குநர் (பொ) சுஜாதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது:

ஜீவகுமார்: கர்நாடகத்தில் மழை பெய்கிறது. பெங்களூருவில் மட்டும் ஒரு இரவில் 111 மி.மீ மழை பொழிந்து வெள்ளக்காடானது. தமிழக அரசு கர்நாடகத்திற்கு அழுத்தம் தந்து காவிரி நீர் பெற வேண்டும். கல்லணை தலைப்பிலேயே தூர் வாரும் பணிகள் முழுமை பெறவில்லை. ஏரிகள் தூர்வாரவில்லை. விவசாய கடன் பெற ஆறு வகையான ஆவணங்கள் கேட்கிறார்கள். (கலெக்டர் தலையிட்டு ஆதார் அட்டை, சிட்டா அடங்கல் என இரு ஆவணங்கள் இருந்தால் போதும் என முறைப்படுத்த அதிகாரிகளிடம் தெரிவித்தார்.)
 
கே.எஸ்.முகமது இப்ராஹிம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள் நீண்ட நெடுங்காலமாக வீட்டு மனை கேட்டுக் அனைத்து வட்டாரங்களிலும் குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற ஜமாபந்தியிலும் மனு கொடுத்து வருகிறார்கள். பாபநாசம், கும்பகோணம், பட்டுகோட்டையில் அரசு புறம்போக்கு இடங்களை ஆய்வு செய்து உடன் கலைஞர் கருணாநிதி சமத்துவபுரத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்க வேண்டும். மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கோடைகால சாகுபடி பயிர்களான நெல், எள், உளுந்து, பருத்தி, வாழை பயிர்கள் அறுவடை நேரத்தில் பெய்த மழையால் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது எனவே பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு நிவாரண நிதியை வழங்க வேண்டும்.

ஏ.கே.ரவிச்சந்தர்: கடந்தகாலங்களில் தமிழக அரசு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அமல்படுத்தியது. அப்போது உரங்களின் விலை அதிமாக இருப்பதால், விவசாயிகள் பயன்பெறும் வகையில் உரங்களை மானியமாக வழங்கியது. இதனால் சிறு, குறு விவசாயிகள் பயன்பெற்றனர். தற்போது குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் இயந்திர நடவு செய்பவர்களுக்கு மட்டும் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது.

வீரப்பன்: திருவோணம் பகுதியில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை திறந்து தேங்காய் கொப்பாரை கொள்முதல் செய்ய வேண்டும். செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி வரும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்னப்பன்பேட்டை செல்வராஜ்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கடந்த 2012 வாங்கப்பட்ட தூசிகளை தூற்றும் இயந்திரங்கள் அனைத்தும் அவ்வப்போது பழுதாவதால், கொள்முதல் பணிகள் தேக்கமடைகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். புதிய இயந்திரங்களை கொள்முதல் செய்ய வேண்டும்.

ஆம்பலாப்பட்டு தங்கவேல்: தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணிகள் பல இடங்களில் பெயரளவுக்கு மட்டுமே நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணியை தொய்வின்றி முழுமையாக செய்து முடிக்க வேண்டும். சித்திரைப் பட்டத்தில் மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து பயிரில் மஞ்சள் நோய் தாக்கியுள்ளது. உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

வீரசேனன்: கல்லணைக் கால்வாய் புனரமைப்பு திட்டத்துக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்த ரூ.447 கோடியை முறையாக செலவிட்டு, கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் புனரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

இதில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் பேசுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் உடன் சிட்டா, அடங்கல் ஆகியவற்றை வாங்கி வேளாண் துறையிடம் வழங்கி பயன்பெற வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டது. இன்னும் 38 கிலோ மீட்டர் தூரம் தான் நிலுவையில் உள்ளது. தூர்வாரப்பட்ட பகுதிகளில் பணியின் தன்மை குறித்த விளம்பர பலகைகள் வைக்கப்படும்.

குறுவை நெற்பயிருக்கு விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.730 ஐ பிரிமீயமாக கட்டி காப்பீடு செய்து கொள்ளலாம். தஞ்சாவூர் மாவட்டத்தில் 437 ஊராட்சி குளங்கள் உள்ளது. இதில் 434 குளங்களில் மண் எடுத்து விவசாயிகள் விளைநிலங்களை வளப்படுத்திக் கொள்ள கண்டறியப்பட்டுள்ளது. எனவே மண் தேவைப்படும் விவசாயிகள் மற்றும் மண்பானை செய்வோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.