தஞ்சாவூர்: வரவு, செலவு மற்றும் கடன் குறித்த ஆவணங்களை கேட்டபோது இப்போது இல்லை. அடுத்த கூட்டத்தில் தருவதாக ஆணையர் தெரிவிக்கிறார். இதை கண்டித்து வெளிநடப்பு செய்தோம் என்று அதிமுக கவுன்சிலர் மணிகண்டன் தெரிவித்தார்.


தஞ்சாவூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக கவுன்சிலர் மணிகண்டன் பேசும்போது, மாநகராட்சி கடன் மற்றும் வரவு செலவு குறித்த அறிக்கை கேட்டபோது பிரச்னை எழுந்ததால் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சில மாதங்களாக தஞ்சை மாநகராட்சி குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை வந்து ஆய்வு நடத்தி உள்ளனர். இது தொடர்பாக அதிமுக மற்றும் எதிர்கட்சிகள் சார்பில் மனு கொடுத்தோம். அந்த மனுவின் அடிப்படையில் தொடர்ந்து மாநகராட்சி மீது குற்றச்சாட்டு வருகிறது. அது குறித்து ஒரு வெள்ளை அறிக்கை கேட்கப்பட்டது. கேள்வி கேட்கும் போது அதற்கான பதிலை உரிய முறையில் சொல்லவில்லை.
 
இந்த அவலங்களையெல்லாம் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்த மக்கள் வந்து தொடர்ந்து கேள்வி கேட்கிறாங்க. அதனால் கேள்வி எழுப்பினோம். ஆனால் ஆணையர் அடுத்த கூட்டத்தில் ஆவணங்களை தருவதாக கூறுகிறார். நாங்கள் கேட்பதற்கு சரியான பதில் சொல்லாம நீங்க உங்களோட ஆட்சி காலத்தில்  தப்பு செய்தீர்கள் என்கிறார்கள். 
 

புரட்சித் தலைவி அம்மா ஆட்சி காலத்தில் தான் வந்து ஊழல் நடைபெற்றதாகவும் சொன்னார். அவருடைய தவறான பேச்சுகள் தவறான நடவடிக்கையை கண்டித்து அதிமுக மற்றும் எதிர்கட்சியினர் அமமுக, பாஜக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தோம்.

இந்த மன்றத்துல மாமன்ற உறுப்பினர் கேள்வி கேட்டால். அதற்குரிய ஆவணங்களை ஒப்படைக்க வேண்டியது ஆணையர் பொறுப்பு. இதை செய்ய மறுக்கிறார்கள். விபரங்களை சரியாக தெரிவிப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.