மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியில் தனியார்  (சரஸ்வதி)  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் நிறுவனர் ரவிந்திரன் இயற்கை மீது பற்றுக் கொண்டவர். அதன் வெளிப்பாடாக இயற்கை வளங்கள் அழிந்து  வருவதாலும், சாலை விரிவாக்கம் போன்ற கட்டமைப்பு வசதிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதாலும், அதிகரிக்கும் வெப்பத்தினால் வருங்காலங்களில் மனிதர்கள் வாழ்க்கையே பெரும் சவாலாக இருக்கக்கூடும் என்பதை இளைய தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையிலும் மரங்கள் வளர்ப்பதினால் ஏற்படும் நன்மைகளும் அவசியம் அனைவரும் மரங்கள் வளர்க்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி  முடிவு செய்தார்.




தான் இயற்கை சூழல் மீது கொண்ட ஆர்வத்துடன், எதிர்கால சந்ததியினரும் இவ்வாறு குறுங்காடுகள் அமைப்பதில் இயல்பாகவே அவர்களும் நேரிடையாக ஈடுபட வேண்டும் என்று நினைத்த ரவீந்திரன், அதற்காக வகுப்பறையில் இதுகுறித்து கல்வியுடன் போதிப்பதினால் அவை மாணவ மாணவிகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று என்னி, தனது பள்ளியின் அருகிலேயே 5 ஏக்கர் நிலத்தை வாங்கி பண்படுத்தும் முயற்சியில் கடந்த 2009 -ஆம் ஆண்டு ஈடுபடத் தொடங்கினார். அப்போது, ஏற்பட்ட தானே புயலின் போது இவர் குறுங்காடு வளர்ப்பில் ஆரம்ப நிலையில் இருந்த மரக்கன்றுகள் பெரிதும் பாதிப்புகள் ஏற்பட்டது. புயலின் தாக்கத்தினால் சாய்ந்த அனைத்து மரக்கன்றுகளையும் ரவீந்திரனே  நிமிர்த்து அதற்கு மண் அணைத்து காப்பாற்றி வளர்த்து வருகிறார்.




இந்நிலையில் தற்போது குறுங்காடுகள் ஆக இயற்கை வனப் பகுதியாக அவை மாறி ரம்மியமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வனப்பகுதியில் தேக்கு, ஆப்பிரிக்க தேக்கு, வெள்ளைக்கடம்பை, சந்தன மரம், செம்மரம், ரோஸ் வுட் , வேங்கை, அரிய வகை கருங்காலி மரம், செண்பக மரம், மலை வேம்பு, கேரளா மட்டி, குமிழ் மரம், மகாகனி, விசு மரம் என 14 வகையான மரங்கள் 40 முதல் 50 அடி உயரம் வரை வளர்ந்து இயற்கையின் வரபிரசாதத்தை  கண் முன் காட்டுகிறது. இந்த மரங்களை வளர்க்க அம் மரங்களில் இருந்து உதிரும் இழைகளையே அவைகளுக்கு இயற்கை உரமாக ஆக்கி அவற்றை உழுது மரங்களுக்கு  கூடுதல் சத்துக்களை ரவீந்திரன் அளித்து வனப் பகுதியை பராமரித்து வருகிறார்.




இந்த குறுங்காடு வனப்பகுதிக்கு தனது தாயாரின் பெயரில் நீலா வனம், வன வெளி பள்ளி என்று மூங்கிலில் உருவாக்க பட்ட பெயர் பலகை அமைத்து இங்கு உயிர் காற்று இலவசம் என்ற குறிப்பு எழுத்துகளை பொறித்து வைத்துள்ளார். பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் நாள்தோறும்  இந்த வனப்பகுதிக்கு அழைத்து வரப்பட்டு தாவரவியல் போன்ற பாடங்களை மூங்கில் கூடில் வகுப்பறை அமைத்து நடத்தி வருகிறார். மூங்கிலால் வேயப்பட்ட இந்த வகுப்பறையில் இயற்கை சூழலுடன் மாணவ மாணவியர் பாடங்களை பயிலும் போது இயற்கை வளத்தை பாதுகாத்துக் பராமரிக்கவும், மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கவும், மரங்கள் அதிக அளவில் நடப்பட வேண்டிய அவசியத்தையும் பாடங்களாக எடுத்துரைக்கின்றனர். 




உலக வெப்பமயமாகி வரும்  நிலையில் இந்த ரம்மியமான சூழலில் மாணவ மாணவிகள் மனதிற்கு இதமாக பாடங்களை படிக்கும் போது இயற்கை மீது  மாணவ மாணவியருக்கு இளம் பருவத்திலே பசுமரத்து ஆணி போல் அவை மனதில் பதிகின்றது. இதனால் வருங்காலத்தில் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தங்களால் முடிந்த அளவு மரங்கள் வைத்து பராமரிக்கவும், இயற்கையை பேணிக்காப்பதிலும் உந்து சக்தி ஏற்படுகிறது.  அதோடு இப்பகுதியில் தடாகம் அமைத்து அதன் மேலே ஒரு மரத்தினாலான வீடு போல் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையாகவே மாணவ மாணவிகள் இதன் மீது ஆர்வம் கொள்ளும் வகையில் இதை பராமரிக்கப்படுகிறது.




அதோடு பள்ளி வளாகம் முழுவதும் தேங்கும் மழை நீர் குழாய்கள் முறையாக அமைத்து இந்த தடாகத்திற்கு வந்து சேரும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த குறுங்காடு வனப் பகுதியில் வெளிநாட்டு பறவைகளும் வந்து அமர்ந்து இளைப்பாரி செல்வதாகவும், மயில், வாத்து , நாரை போன்ற  பறவையுங்கள் இந்த சூழலை ரசித்து அங்கு முகாம் இடுவதையும் மாணவ மாணவிகள் கண்டு ரசிக்கின்றனர். மரம் வளர்ப்பை பற்றி ஏட்டு அளவில் மட்டும் மாணவர்களுக்கு பயிலாமல் நடைமுறை வடிவம் கொடுத்துள்ள ரவீந்திரன் அனைவருக்கும் ஓர் முன்மாதிரி என்றால் அது மிகையாகாது.


Chandrayaan 3 Facts: விண்ணில் சீறப்போகும் சந்திரயான் - 3..! சந்திரயான் 2-லிருந்து எப்படி எல்லாம் மேம்படுத்தப்பட்டுள்ளது தெரியுமா?