சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அடாது மழையிலும் விடாது வொர்க் அவுட் செய்கிறார் முதலமைச்சர் என அவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் உடற்பயிற்சியில் ஆர்வம் மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் மகாபலிபுரம் சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அவ்வப்போது அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் வைரலாவது உண்டு. இதற்கிடையே இன்று கடும் மழைக்கு நடுவிலும் அவர் தனது ஆர்வத்தை விடாமல் உடற்பயிற்சி செய்து வருகிறார் என அவருக்கு சமூக வலைதளங்களில் ’சியர்ஸ்’ குவிந்து வருகின்றன. 





முன்னதாக, தனது தலைமையிலான அரசின் 100 நாள் ஆட்சியில் நடந்த நிகழ்வுகள் குறித்து ட்விட்டர் தளத்திலும் சட்டமன்றத்திலும் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து கூறியிருந்தார்.


கொரோனா காலத்தில் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியதும், அவர்களுக்கு அரவணைப்பாக இருந்ததும்தான், இந்த அரசு 100 நாட்களில் செய்த பெரிய சாதனையாக தான் கருதுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


 



2021-22ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் அமைச்சர் உரையாற்றினார். சுமார் 2 மணி நேரம் ஆற்றிய உரையில் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பட்ஜெட் உரை முடிந்தபின்பு, திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் 100 நாள் ஆனதை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


 


அதில், “தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. படிப்படியாக தொடர்ந்து நிறைவெற்றுவோம். நம்பிக்கை கொடுக்கும் நாட்களாக 100 நாள் ஆட்சி அமைந்துள்ளது. 100 நாள் சாதனை பற்றி பேசினீர்கள். ஆனால், அடுத்து வரும் காலம் பற்றியே என் நினைப்பு இருக்கிறது. வாழ்த்த மனமில்லாதவர்களையும் வென்றெடுக்க அடுத்த 100 நாளில் பணிகள் இருக்கும். கொரோனா காலத்தில் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியதும்; அவர்களுக்கு அரவணைப்பாக இருந்ததும்தான், இந்த அரசு 100 நாட்களில் செய்த பெரிய சாதனையாக நான் கருதுகிறேன். இது மக்களின் சாதனை, உங்களுக்கு உழைக்க எனக்கு நீங்கள் உத்தரவிட்டதால் கிடைத்த பயன் இது. பெரியார் கண்ட கனவை கலைஞர் முன்னெடுத்ததை செயல்படுத்தி வருகிறேன். கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பு என்னை இயக்குகிறது நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம்” என்று கூறினார்.இதனைத்தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, அண்ணா நினைவிடங்களில் சென்று முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். அப்போது உடன் துரைமுருகன், சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் உடனிருந்தனர். 100 நாள் திமுக ஆட்சி, வேளாண் பட்ஜெட் ஒரே நாளில் வந்தததால், கருணாநிதி நினைவிடம் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காய்கறிகளின் மேல், ‘100 நாள் ஆட்சி மக்கள் மகிழ்ச்சி’ என எழுதப்பட்டிருந்தது.மேலும்,  திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் 100 நாள் நிறைவடைந்ததை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு கட்சியின் ஆட்சியாக இன்றி, ஓர் இனத்தின் - கொள்கையின் ஆட்சியாக, கடந்த 10 ஆண்டுகளாகத் தாழ்ந்து கிடந்த தாய்த்தமிழ்நாட்டின் மீட்சியாக மிடுக்குடன் நூறாவது நாளில் கழக அரசு! 100 நாட்கள் அளித்த உற்சாகத்தோடு நூற்றாண்டுக்குப் பெயர் நிலைக்கும் சாதனைகளைச் செய்வோம்!’ எனப் பதிவிட்டுள்ளார்.