Just In




Annamalai On CM Stalin: திமுககாரங்க ஸ்கூல்ல சேர்த்து விடனுமா? கருப்பு டப்பா? - முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
Annamalai On CM Stalin: மும்மொழிக் கல்விக் கொள்கை வாய்ப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மறுக்கப்படுவது ஏன்? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கேள்வியாக எழுப்பியுள்ளார்.

Annamalai On CM Stalin: திமுகவின் போலி நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப்போவதில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை கேள்வி
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின், கருப்பு பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் கழகக் கண்மணிகளுக்கு கடிதம் ஒன்று எழுதியிருப்பதாக அறிந்தேன். அதில் அவர், நாம் எந்த மொழிக்கும் எதிரியில்லை. யார் எந்த மொழியைக் கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
CBSE மற்றும் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மும்மொழி கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு, இதுவரை பதில் அளிக்க மறுத்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மும்மொழி கற்கத் தடை இல்லை, ஆனால் நீங்கள் கற்கவேண்டும் என்றால் திமுகவினர் நடத்தும் CBSE அல்லது மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளைச் சேர்த்துவிடுங்கள் என்கிறாரா திரு ஸ்டாலின்? உங்கள் போலி நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப்போவதில்லை. பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, ஏழை எளியவர்களுக்கு ஒரு நீதி என்ற திமுகவின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது. மேலும், பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் உங்கள் கட்சியினருக்கு, இந்தி எது ஆங்கிலம் எது என்பதை, உங்கள் அறிக்கை விளக்க மறந்து போனது உள்ளபடி வருத்தமே” என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
வைரலாகும் திமுகவினரின் வீடியோ
மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி, பல்வேறு இடங்களில் திமுகவினர் இந்தி அழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கடையநல்லூர் ரயில் நிலையத்தில் திமுகவினர் போரட்டத்தில் ஈடுபட்ட போது, அங்கிருந்த பெயர் பலகையில் இந்தியை அழிப்பதற்கு பதிலாக ஆங்கிலத்தை அழித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை குறிப்பிட்டு தான், ”பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் உங்கள் கட்சியினருக்கு, இந்தி எது ஆங்கிலம் எது என்பதை, உங்கள் அறிக்கை விளக்க மறந்து போனது உள்ளபடி வருத்தமே” என அண்ணாமலை தனது டிவிட்டர் பதிவில் விமர்சித்துள்ளார்.