என்.எல்.சி. சுரங்கத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் விபத்துகள் மூலம் தொழிலாளர்கள் உயிரிழப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 


நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி காலை தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது 5 வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்ததில்  15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.


இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை பதிவு செய்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, என்.எல்.சி. அதிகாரிகளான கோதண்டம், முத்துக்கண்ணு உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 


இந்த மனு நீதிபதி RMT. டீக்காரமன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் சார்பில் வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி, முன் ஜாமீன் வழங்க ஆட்சேபனம் தெரிவித்தார்.


மேலும், சுரங்கத்தில் ஏற்படும் விபத்துகள் மூலம் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதாகவும், அவ்வாறு உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடோ அல்லது கருணைத் தொகையோ வழங்கவில்லை எனவும் கூறினார். 


விபத்துகள் தொடர்பாக காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என்.எல்.சி.க்கு சாதகமாக செயல்படுவதாகவும் பாலு தெரிவித்தார். 


காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருள்செல்வம், என்.எல்.சி.யில் தொடர்ச்சியாக இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக கூறினார். 


இதற்கு எதிர்ப்பு தெரிவித்த என்.எல்.சி. தரப்பு வழக்கறிஞர் நித்தியானந்தம், விபத்தில்  உயிரிழந்தவர்களுக்கும் , காயமடைந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படுவதோடு, உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுவதாக கூறினார். இடையீட்டு மனுதாரர்கள் இந்த விவகாரத்தை வேண்டுமென்றே பெரிதாக்கி அரசியல் செய்வதாக குற்றம்சாட்டியதுடன்,  தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்துக்கு தங்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முடியாது எனத் தெரிவித்தார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு உள்ளதாகவும் குறிப்பிட்டார். 


அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஓரிரு விபத்துகள் என்றால் தொழிலாளர்களின் கவனக்குறைவால் மரணம் என எடுத்துக்கொள்ளலாம்.  ஆனால் தொடர்ச்சியாக என்.எல்.சி அனல் மின் நிலையத்தில் இதுபோன்ற விபத்துகள் நிகழ்வது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.  அப்படி இறக்கும் தொழிலாளர்களின் உயிரிழப்பை எப்படி எடுத்துக்கொள்வது என கேள்வி எழுப்பி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 25 ஆம் அதாவது அடுத்த வெள்ளிகிழமைக்கு ஒத்திவைத்தார்.


Chandrayaan 3: சொல்லி அடித்த இந்தியா..சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து பிரிந்தது விக்ரம் லேண்டர் -இஸ்ரோ அறிவிப்பு


Jailer Box Office: ‘தெறிக்கவிடும் வசூல் வேட்டை’ .. ஜெயிலர் ஒரு வார கலெக்‌ஷன் எவ்வளவு? .. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!


INS Vindhyagiri: இந்தியாவின் அதிநவீன போர்கப்பல்.. இன்று முதல் சேவையில் இணையும் ஐ.என்.எஸ் விந்தியகிரி.. சிறப்பம்சங்கள் என்ன?