கோடி கோடியாய் அள்ளிச்சென்ற நிறுவனங்கள்

 

ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மோசடி நிதி நிறுவன நிர்வாகிகள், முகவர்கள் உட்பட 45 பேரைக் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஆருத்ரா என்ற நிதி நிறுவனம்,  1,09,285 முதலீட்டாளர்களிடமிருந்து 2,438 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இந்த வழக்கில் மாலதி, மைக்கேல் ராஜ், ஹரிஷ், ராஜ செந்தாமரை, சந்திர கண்ணன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த மோசடியில் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தமிழக பா.ஜ.கவின் ஓ.பி.சி. பிரிவு துணை தலைவராக இருக்கும் ஆர்.கே.சுரேஷுக்கும், பா.ஜ.கவின் நிர்வாகி ஹரீஷ் ஆகியோருக்கும் தொடர்பிருந்த்து கண்டுபிடிக்கப்பட்டது.

 

ஆருத்ராவை தொடர்ந்து 'எல்பின்' நிதி நிறுவன நிறுவனருக்கும் நடிகர் ஆர்.கே சுரேஷ் உதவி செய்தது கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 8 மாத காலமாக வெளிநாட்டில் தலைமுறைவாக இருக்கும் ஆர்.கே சுரேஷை பிடிப்பதற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 


சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கை

 

ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கு சொந்தமான 127 அசையா சொத்துக்களை சென்னை பொருளாதார, குற்றப்பிரிவு போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இதன் மதிப்பு 23.34 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மதிப்பீட்டின்படி 23.34 கோடி என்றாலும், இதன் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 90 கோடி ரூபாய் வரும் என கூறப்படுகிறது. இதில் இயக்குனரான ராஜசேகரின் 11 இடங்களில் சொத்துக்களை வாங்கி இருப்பதும் அதன் மடிப்பு 8 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. அனைத்து அசையா சொத்துக்களையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் வசம் வந்துள்ளது.

 

தொடர்ந்து இந்த சொத்துக்கள் நீதிமன்ற அனுமதியுடன் முடக்கப்பட்டு, அவை ஏலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏலம் விடப்பட்டு கிடைக்கும் பணத்தின் மூலம், முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

 


துபாயில் பதுங்கல்

 

இந்தநிலையில்,  ஆருத்ரா நிதி நிறுவன மோசடி முக்கிய குற்றவாளியான ராஜசேகர் மகாலட்சுமி  ஆகியோரும்  துபாயில் பதுங்கி இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். தற்பொழுது “லுக் அவுட்" நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட நபர்கள் துபாயிலிருந்து தப்பிச் செல்லவும் வழியில்லாததால்,  காவல்துறையினர்   இருக்கும் இடத்தை நெருங்கியதாக   தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்களை கைது செய்ய "இன்டர்போல்" எனும் சர்வதேச போலீசாரின் உதவியை நாடியுள்ளனர்.

 

இந்த நிலையில்  ராஜசேகர் மற்றும்  மகாலட்சுமி ஆகியோர் குறித்து தகவல்களை சேகரிக்கவும் கைது செய்யவும் துபாய் மற்றும் இந்தியா இடையே உள்ள பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை பயன்படுத்த முடிவு செய்திருந்தனர். இதன் அடிப்படையில், இந்த  ஒப்பந்தம் மூலம் சென்னையில் ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி வழக்கு விசாரணை நடக்கும் நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற்று, அதை துபாய் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.

 

அதன் வாயிலாக அந்த நாட்டு போலீசார் ராஜசேகர் மற்றும் மகாலட்சுமி ஆகியோரை  ஒப்படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதே போன்று நடிகர் ஆர் கே சுரேஷ் துபாயில்   இருப்பது உறுதி செய்யப்பட்டால்,  அவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்