நிலவை நெருங்கிய சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து, விக்ரம் எனும் லேண்டர் பாகம் வெற்றிகரமாக தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. 


சாதித்த இஸ்ரோ:


கடந்த மாதம் 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், பல கட்ட பயணத்திற்கு பிறகு நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு கொண்டு செல்லப்பட்டது.  அதன்படி நேற்று,  நிலவிற்கும் சந்திரயான்-3 விண்கலத்திற்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் 153 கிலோ மீட்டராகவும்,  அதிகபட்ச தூரம் 163 கிலோ மீட்டராகவும் நிலைநிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் எனும் லேண்டர் பாகம் வெற்றிகரமாக தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான டிவிட்டர் பதிவில் “ நிலவை நோக்கி லேண்டரை உந்தித்தள்ளும் அடுத்தகட்ட பணி, நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், புரபல்சன் அமைப்பு தொடர்ந்து தற்போதுள்ள சுற்றுவட்டப் பாதையிலேயே சில மாதங்கள் அல்லது வருடங்களுக்கு பயணிக்கும்.  இந்த பயணத்தின் போது  அதில் உள்ள ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் மூலம் பூமியின் வளிமண்டலத்தை ஆய்வு செய்து மேகங்களிலிருந்து துருவமுனைப்பு மாறுபாடுகளை அளவிடும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.






சந்திரயான் 3:


நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ஆம் தேதி இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது. பின்பு புவியின் சுற்றுவட்டப் பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 20 நாட்கள் பயணம் மேற்கொண்டு கடந்த 5-ஆம் தேதி சந்திரனின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான்-3 விண்கலம் நுழைந்தது. 


சந்திரயானின் சுற்றுவட்டப்பாதை:


இதனைத்தொடர்ந்து, நிலவில் சுற்றுவட்டப் பாதையில் உள்ள சந்திரயான் – 3 கடந்த 6ம் தேதி முதன்முறையாக, நிலவை நோக்கி தள்ளப்பட்டது. அதன் பின்பு கடந்த 9, 14 மற்றும் நேற்று என அடுத்தடுத்து சந்திரயான் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை தூரம் திட்டமிடப்பட்டபடி குறைக்கப்பட்டு நிலவிற்கு நெருக்கமாக கொண்டு செல்லப்பட்டது. அதன்படி, நிலவிற்கும் சந்திரயான்-3 விண்கலத்திற்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் 153 கிலோ மீட்டர் மற்றும் அதிகபட்ச தூரம் 163 கிலோ மீட்டர் என்ற அளவிற்கு குறைக்கப்பட்டது. இதனிடையே, லேண்டர் கேமரா மூலம் ஆகஸ்ட் 9ம் தேதி எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.  இதன் மூலம் லேண்டரில் உள்ள கேமராவின் செயல்பாடு தொடர்பான சோதனையும் வெற்றிகரமாக முடிந்தது.


இறுதிகட்டம்:


இந்த நிலையில் தான், லேண்டர் அமைப்பை தனியாக பிரிக்கும் பணியை இஸ்ரோ வெற்றிகரமாக செய்து முடிந்துள்ளது. தொடர்ந்து,  லேண்டர் அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் முதல் குறைந்தபட்சமாக 30 கிலோமீட்டர் வரை நீள்வட்டப் பாதையில் நகர்த்தப்படும். லேண்டரின் அடிப்பகுதியில் நான்கு குட்டி ராக்கெட்டுகள் உள்ளன. அவற்றின் உதவியுடன், லேண்டர் மெல்ல மெல்லத் தரையிறக்கப்படும்.  அதன்படி வரும் 23ம் தேதி நிலவின் மேற்பரப்பில் லேண்டர் தரையிறங்கியதும், அதைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சுவர்களில் ஒன்று கீழ்நோக்கி சரியும். அந்த சாய்வுப் பலகையின் வழியே ரோவர் கீழே இறங்கி நிலவில் தடம் பதிக்கும். தொடர்ந்து பயணித்து ஆய்வுப்பணிகளை மேற்கொள்வது, பல்வேறு தகவல்களை சேகரித்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்புவது தான் சந்திரயானின் இறுதி  கட்டமாகும்.