தென்மேற்கு வங்க கடலில் உள்ள மாணடஸ் புயல், 14 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, சென்னைக்கு தென் கிழக்கே மையம் கொண்டுள்ளது. 


தொலைவு:


இந்த புயலானது, தற்பொழுது ( இரவு சுமார் 10 மணி நிலவரப்படி), மாமல்லபுரத்தில் இருந்து 70 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 70 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தற்போது புயல் காற்றின் சுற்றும் வேகமானது மணிக்கு 70 கி.மீ லிருந்து 80 கி.மீ வரை காணப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா  இடையே, மகாபலிபுரத்துக்கு அருகே இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.






இந்நிலையில், வழக்கத்தை விட சென்னை, மாமல்லபுர கடற்கரைகளில் கடல் அலைகள் ஆக்ரோசத்துடன் காணப்படுகின்றன.


ரெட் அலெர்ட்:


மாண்டஸ் புயல் காரணமாக இன்று மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை


செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் ஒரு சில இடங்களில் அதி கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மீனவர்கள் எச்சரிக்கை ; 


இன்று மற்றும் நாளை வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரைகள் மற்றும் மன்னார் வளைகுடா, இலங்கைக் கடற்கரையை ஒட்டி பகுதிக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுவரை 12 புயல்:


கடந்த 121 ஆண்டுகளில் சென்னை-புதுச்சேரி இடையே  12 புயல்கள் கரையை கடந்துள்ளன. மாண்டஸ் புயல் கரையை கடக்கும் பட்சத்தில் 13வது புயலாகும் என சென்னை மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


மாண்டஸ் புயல்:


தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று மாலை தீவிரப்புயலாக வலுப்பெற்ற மாண்டஸ் புயல், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08.30 மணியளவில் புயலாக வலு குறைந்தது.


வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரை, புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே,  மாமல்லபுரத்தைச் சுற்றி இன்று  நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அவ்வாறு மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது, 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.


Also Read: Cyclone Mandous LIVE: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மின்வாரியம் சார்பில் 25 குழுக்கள்


Also Read: School College Leave: 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. எந்த மாவட்டங்களில் தெரியுமா?