இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவின்படி,  தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று மாலை தீவிரப்புயலாக வலுப்பெற்ற மாண்டஸ் புயல், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08.30 மணியளவில் புயலாக வலுகுறைந்தது. அதைதொடர்ந்து, காலை 11.30 மணி நிலவரப்படி மாமல்லபுரத்தில் இருந்து தென்கிழக்கு பகுதியில் 180 கி.மீ. தொலைவில்  மாண்டஸ் புயல்  நிலைகொண்டுள்ளது.






 


வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரை, புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே,  மாமல்லபுரத்தைச் சுற்றி இன்று  நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அவ்வாறு மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது, 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதோடு,  மாண்டஸ் புயல் காரணமாக வடதமிழகத்தில் மாலை முதல் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.






குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான அமைந்தக்கரை, அயனாவரம், செங்கல்பட்டு, குன்றத்தூர், பெரம்பூர், புரசைவாக்கம், திருக்கழுகுன்றம், தண்டையார்பேட்டை, உத்திரமேரூர், வண்டலூர் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதேபோன்று, பல்லாவரம், மாம்பலம், மயிலாப்பூர் பகுதிகளிலும், ஆலந்தூர், எழும்பூர், கிண்டி, சோழிங்கநல்லூர், தாம்பரம், வேளச்சேரி பகுதிகளிலும் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது


 


11.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


மீனவர்கள் எச்சரிக்கை: 


இன்று மற்றும் நாளை வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரைகள் மற்றும் மன்னார் வளைகுடா, இலங்கைக் கடற்கரையை ஒட்டி பகுதிக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.


மாண்டஸ் புயலை எதிர்கொள்ள இந்திய கடலோர காவல்ப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.