கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனந்த் சிங், தீபாவளியன்று தனது ஹோசப்பேட்டை தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பணம், தங்கம், வெள்ளி மற்றும் ஆடைகள் அடங்கிய பெட்டியை பரிசாக வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


அவர் வழங்கிய  பரிசுப் பெட்டியில் ரூ. 1 லட்சம் ரொக்கம், 144 கிராம் தங்கம், 1 கிலோ வெள்ளி, ஒரு பட்டுப் புடவை, ஒரு வேட்டி, ஒரு உலர் பழப் பெட்டி ஆகியவை இருந்ததாக தெரியவந்துள்ளது. ஆனந்த சிங் இரண்டு பெட்டிகளை பரிசாக வழங்கினார், ஒன்று மாநகராட்சி  உறுப்பினர்களுக்கும் மற்றொன்று கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்குமாகும்.


அவரது தொகுதியில் 35 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் ஒரு மாநகராட்சியும், 182 உறுப்பினர்களுடன் 10-கிராம பஞ்சாயத்துகளும் உள்ளன. மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்தலினால் இந்த பரிசுப்பெட்டியை கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. ஆனால் இதனை அறிந்த ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பரிசுப் பெட்டிகளை வாங்க  மறுத்துவிட்டனர்.


ஆனந்த் சிங்கின் ஆதரவாளர்கள் இதை மறுத்துள்ளனர். மேலும் அமைச்சர் அவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற  பரிசுகளை அனுப்புவது வழக்கம் என கூறுகின்றனர். கர்நாடக சட்டசபைக்கு 224 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 2023 மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிபிடத்தக்கது.  


கர்நாடக மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள மோடி பல்வேறு திட்டங்களை அம்மாநிலத்தில் செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. 2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் முயற்சியில், பா.ஜ.க, எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி இல்லாத ஓ.பி.சி வகுப்பினருக்குள் (OBC) உள்ள துணைக் குழுக்களை அடையாளம் கண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கான உத்தியை மேற்கொண்டுள்ளது.

 

கர்நாடகாவில் ஓ.பி.சி மக்கள் தொகை சுமார் 33% என மதிப்பிடப்பட்டுள்ளது, பா.ஜ.க.,வின் பாரம்பரிய லிங்காயத் வாக்கு வங்கி மற்றும் பழங்குடி சமூகங்களின் ஒரு பகுதி ஆகியவற்றின் ஆதரவைத் தாண்டி, ஓ.பி.சி.,க்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட துணை சமூகங்களிடையே அதன் ஆதரவு தளத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று பா.ஜ.க எண்ணுகிறது. இந்த ஓ.பி.சி சமூகங்களின் மேம்பாடு மற்றும் நலனில் மட்டுமே கவனம் செலுத்துவதற்காக கர்நாடகா பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் ஒரு சிறப்புப் பிரிவை மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்றும் பசவராஜ் பொம்மை கூறியிருந்தார். உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் சமீப காலங்களில் பா.ஜ.க கடைப்பிடித்த உத்தியைப் போலவே இதுவும் உள்ளது, அங்கு மற்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள யாதவர்கள் போன்ற ஆதிக்கக் குழுக்களுக்குப் பதிலாக சிறிய பிற்படுத்தப்பட்ட வகுப்புக் குழுக்கள் மீது பா.ஜ.க கவனம் செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.