சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன்







 

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், ரானா டகுபதி, மஞ்சு வாரியர்,  ரித்திகா சிங், கிஷோர், அபிராமி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 10 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. 

 

இயக்குநர் ஞானவேல் - ரஜினி கூட்டணி

 

இயக்குநர் ஞானவேலின் முந்தைய படமான ஜெய் பீம் பழங்குடி மக்கள் மீது செலுத்தப்படும் ஒடுக்குமுறை பற்றி மிக வெளிப்படையாக பேசியது. இன்னொரு பக்கம் கடந்த ஆண்டு ரஜினியின் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது இந்த இருவரின் கூட்டணியில் அமைந்துள்ள வேட்டையன் படம் 50 சதவீதம் ஞானவேல் படமாகவும் 50 சதவீதம் ரஜினியின் படமாகவும் உருவாகி இருப்பதை இந்த டிரைலரில் பார்க்க முடிகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள வேட்டையன் திரைப்படத்திற்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



 

மதுரை உலகநேரியைச் சேர்ந்த பழனிவேலு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, வேட்டையன் படத்திற்கான டீசர் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வெளியான நிலையில் அதில் சட்டவிரோத என்கவுன்டரை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளும் மனப்போக்கை உருவாக்கும் வகையில் என்கவுன்டர் தொடர்பான வசனம் இடம் பெற்றுள்ளது. இதனை நீக்க கோரி அதிகாரிகளிடம் முறையிடும் நடவடிக்கை இல்லை. ஆகவே வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்டர் தொடர்பான வசனங்களை நீக்கவோ அல்லது mute செய்யவோ உத்தரவிட வேண்டும். அதுவரை வேட்டையன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

 

வேட்டையன் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு






 

இந்த மனு நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியாக கௌரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், என்கவுன்டரை ஆதரிப்பது போல வேட்டையன் படத்தில் காட்சிகளும், வசனங்களும் வருகின்றன. எனவே படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். அப்போது நீதிபதிகள், மனு குறித்து மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மற்றும் லைகா நிறுவனத்தித்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, வேட்டையன் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.