மதுரையில் தொடர்ந்து 2-வது நாளாக மாலை நேரத்தில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

TN Weather Update ; தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில்  அநேக இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது.

 


 

தமிழகத்தில் நாளையும் மழை


நாளை, தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.” எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்றும் இரண்டாவது நாளாக மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்து வருகிறது.
 


கருமேகங்கள் சூழ்ந்து கனமழை


மதுரை மாநகரின் முக்கிய சாலையிலான அண்ணா நகர், டி.ஆர்.ஓ. காலனி, ரேஸ்கோர்ஸ் காலனி, தல்லாகுளம், கோரிப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம், பழங்காநத்தம், அண்ணா பேருந்து நிலையம், கீழவாசல், காளவாசல், தல்லாகுளம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும், மதுரையின் முக்கிய இடங்களில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக ஆங்காங்கே சாலையில் வேலை நடைபெற்று வருகிறதால் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

 

காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை வேளையில் இடியுடன் கூடிய கனமழை பொழிந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்., வாகனங்களில் செல்பவர் சாலையில் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். கோடை மழை பொழிவால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது.