Garudan Movie Box Office Collection: கருடன் படத்தின் முதல் மூன்று நாள்களின் வசூல் நிலவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.


சூரியின் ஆக்‌ஷன் அவதாரம்




துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ள கருடன் திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சசிக்குமார், உன்னி முகுந்தன், ஷிவதா, சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கருடன் திரைப்படம், நேற்று முன் தினம் திரையரங்குகளில் வெளியானது.


சூரி விடுதலை படம் தந்த எனர்ஜியுடன் மீண்டும் ஹீரோவாக இப்படத்தில் களமிறங்கியுள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் வெளியானது. இந்நிலையில், வழக்கமான டெம்ப்ளேட் கதையில் விறுவிறுப்பு கூட்டி சூரியை மாஸ் ஆக்சன் அவதாரத்தில் காண்பித்து அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் இப்படம் வரவேற்பைப் பெற்றுள்ளது.


பாசிட்டிவ் விமர்சனங்கள்


இண்டர்வெல் காட்சி, சூரியின் நடிப்பு, யுவனின் இசை ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்நிலையில் கருடன் படத்தின் முதல் 3 நாள் வசூல் நிலவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாள் கருடன் திரைப்படம் ரூ. 3.5 கோடிகளை வசூலித்த நிலையில், இரண்டாம் நாளான நேற்று ரூ.8.35 கோடிகளை இந்தியா முழுவதும் இப்படம் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் சாக்னிக் தளம் பகிர்ந்துள்ளது. மேலும் மூன்றாம் நாளான இன்று தோராயமாக ரூ.4.22 கோடிகளை இப்படம் வசூலித்துள்ளதாகவும் இதுவரை மொத்தம் ரூ.12.57 கோடிகளை இந்தியா முழுவதும் கருடன் திரைப்படம் வசூலித்துள்ளதாகவும் சாக்னிக் தளம் பகிர்ந்துள்ளது. 




தமிழ் சினிமாவுக்கு தொடங்கிய விடிவுகாலம்


இந்த ஆண்டு தொடக்கம் முதலே, கடந்த 5 மாதங்களில் வெளியான தமிழ் திரைப்படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் சொதப்பி வந்த நிலையில், மற்றொருபுறம் சிறு பட்ஜெட்டுக்கு பெயர் போன மலையாள திரைப்பட உலகம் அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்களை வழங்கி ஏக்கப்படவைத்து வருகிறது.


பாக்ஸ் ஆஃபிஸ் வறட்சியால் சோர்ந்து போயிருந்து தமிழ் சினிமா உலகுக்கு சென்ற மாதம் வெளியான அரண்மனை 4 திரைப்படம் சற்று ஆறுதல் அளித்து, உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலைப் பெற்றுக் கொடுத்தது. கோடை விடுமுறை கைகொடுத்த நிலையில், அரண்மனை 4 திரைப்படம் கலவையான விமர்சனங்களைக் கடந்து இந்த ஆண்டு தமிழில் ரூ.100 கோடி வசூலித்த முதல் படமாக உருவெடுத்தது.


அரண்மனை 4ஐ மிஞ்சுமா கருடன்?


 






இந்நிலையில் நீண்ட நாள்கள் கழித்து இந்த ஆண்டு அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளியுள்ள கருடன் திரைப்படம் அரண்மனை 4 வசூலை மிஞ்சுமா என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர். 


முன்னதாக சூரி கதாநாயகனாக நடித்த விடுதலை படம் முதல் நான்கு நாள்களில் rஊ.28 கோடிகள் வசூலித்த நிலையில், அதன் பின் வசூல் நிலவரம் பற்றி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் கமர்ஷியல் அம்சங்களுடன் பக்காவான கதையில் மீண்டும் ஹீரோவாக நடித்துள்ள சூரி இந்த முறை வசூலிலும் பின்னியெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.