பெரும்பாலான இனிப்பு அல்லது உணவுப் பொருட்களில் இது போன்ற விலங்கு கொழுப்பு பயன்படுத்துவது வழக்கமாக, உலகம் முழுவதிலும் நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். இதனையும் அரசியலாக்குவது ஏன் என்று தெரியவில்லை - விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.

 

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கட்சிக் கொடிக் கம்பம் நடப்பட்டது

 

மதுரை  மாநகர் கே.புதூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 14-ஆம் தேதி இரவு 62 அடி கட்சிக்கொடிக் கம்பம் நடப்பட்டது. அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி இல்லை என, வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதால் கட்சி கொடி கம்பத்தை இரவோடு இரவாக காவல்துறையினரால் அகற்றப்பட்டது . இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மாலை மீண்டும் கொடிக்கம்பம் ஒப்படைக்கப்பட்டு அதே பகுதியில் நடப்பட்டது.

 


 

கிரேன் மூலமாக பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டது

 

இந்நிலையில் போராட்டத்திற்கு பின்பு நடப்பட்ட கொடிக் கம்பத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்றி வைத்து, விசிக அரசியல் அங்கிகாரம் பெற்ற விழாவாக நடத்தினார்.  இதில் கொடிகம்பத்தை நடுவதற்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், சால்வை அணிவித்து வாழத்து தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் திருமாவளவனுக்கு கிரேன் மூலமாக பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டது. அப்போது விழா மேடையில் குழந்தைகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பெயர்களை சூட்டினார். 

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்..,”

 

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கேள்விக்கு?

 

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேசிய அளவில் ஒரு சலசலப்பை உருவாக்குவதற்கு, பாஜக முயற்சிக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்கள் ஆதரவு தர வேண்டும். அதற்கு, வாய்ப்பு குறைவு. ஒரே நாடு ஒரே தேர்தல் கோட்பாடு என்பது அடுத்தடுத்த ஆண்டுகளில்  குடியரசுத் தலைவரின் ஆட்சியை திணிப்பதற்கான முயற்சி என அச்சப்படுகிறோம். இது தொடர்பாக முன்னாள் குடியரசுதலைவர்  ராம்நாத் கோவிந்தை சந்தித்து இந்த ஒரேநாடு ஒரேதேர்தல் முறையை கைவிட வேண்டும், அதனை நடைமுறைபடுத்த அனுமதிக்கூடாது, என  விசிக சார்பில் மனு கொடுத்து வலியுறுத்தியுள்ளோம். ஆகவே இதனை எதிர்க்கிறோம். ஒருமித்த கருத்துடைய அரசியல் சக்திகளோடு இணைந்து எதிர்ப்பை பதிவு செய்வோம்.

 

திருப்பதி லட்டுவில் மாட்டுக்கொழுப்பு கலப்பு தொடர்பான கேள்விக்கு?

 

பெரும்பாலான இனிப்பு அல்லது உணவு பொருட்களில் இது போன்ற விலங்கு கொழுப்பு பயன்படுத்துவது வழக்கமானது. இது  உலகம் முழுவதிலும் நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். இதனையும் அரசியலாக்குவது ஏன் என்று தெரியவில்லை. அதில் விலங்கு கொழுப்பு மற்றும் மாட்டுக்கொழுப்பு இருக்கக்கூடாது என்றால் அதற்குரிய வழிகாட்டுதலை செய்து இதுபோன்று இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

அதிகார பங்கு வரும் சட்டமன்ற தேர்தலில் கேட்கப்படுமா என்ற கேள்விக்கு? 

 

இதற்குப் போதிய அளவு விளக்கம் சொல்லிவிட்டோம்” என்றார்.