Suruli falls: ஒரு சொட்டு கூட தண்ணி இல்ல ! சுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
Theni Suruli Falls: முற்றிலும் நீர்வரத்து இன்மையால் அருவி வெறிச்சோடி வெறும் பாறைகளாக காணப்படுகிறது. சுற்றுலா பயணம் வரும் பயணிகள் ஏமாற்றம்.
Suruli Aruvi Theni: தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுருளி மலையில் கைலாசநாதர் கோயில், பூத நாராயணர் கோயில் உள்ளது. இங்குள்ள சுருளி அருவி தமிழ்நாட்டின் மிக முக்கிய அருவிகளில் ஒன்றாக விளங்குகிறது. சுருளி அருவியில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து, சுருளி அருவியில் குளித்து நீராடி, முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தி செல்வார்கள்.
Just In
தற்போது கோடை வெயிலின் தாக்கம் மாவட்டத்தில் அதிகமாக உள்ளதால் மாவட்டத்தில் உள்ள அணைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகளில் நீர் இருப்பு குறைந்து வருகின்றன. அருவிக்கு நீர்வரத்து வரும் ஹைவேவிஸ் பகுதியில் உள்ள தூவானம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக பல்வேறு மூலிகை செடிகளில் கலந்து அருவியாக கொட்டுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் சுருளி அருவியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. அருவி பகுதி முழுவதும் தண்ணீர் இன்றி பாறையாக காட்சியளிக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் சுருளி அருவி நீர் பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை ஆகிய வனப் பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு, நீர்வரத்து முற்றிலுமாக நின்று சுருளி அருவி வெறும் பாறையாக காட்சியளிக்கின்றது.
இதன் காரணமாக சுருளி அருவிக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் அருவியில் நீர்வரத்து இல்லாததால் திருப்பி அனுப்பி வருகின்றனர், இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும் அருவியில் நீர்வரத்து வரும் வரை சுற்றுலா பயணிகள் யாரும் வருகை தந்து ஏமாற வேண்டாம் என வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.