தனக்குத் தானே செல்ஃப் சார்ஜிங் செய்து கொள்ளும் Bike - போடி இளைஞர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு
எலக்ட்ரிக் பைக்குகளில் தனக்குத் தானே செல்ஃப் சார்ஜிங் செய்து கொள்ளும் வகையில் புதிய பைக்கை கண்டுபிடித்த போடியை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள்..

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள B.மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு சிவ மூர்த்தி (24) மற்றும் சிவனேஸ்வரன் (22) என்ற இரு மகன்கள் உள்ளனர். எம்காம் பட்டதாரியான இவர்கள் மோட்டார் வாகனம் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால் இரு சக்கர வாகனங்களில் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட முயற்சி செய்தனர். தற்போது எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் தேவை அதிகரித்து வருவதால் அதில் என்ன மாற்றம் கொண்டு வரலாம் என யோசித்தனர்.
Just In





அப்போது எலக்ட்ரிக் பைக்குகள் நீண்ட தூரம் செல்ல முடியாமல் அடிக்கடி சார்ஜ் செய்யும் நிலை உள்ளது. இதற்கு மாற்றாக எலக்ட்ரிக் பைக்குகளில் தனக்குத் தானே செல்ஃப் சார்ஜிங் செய்து கொள்ளும் வகையில் புதிய பைக்கை கண்டுபிடித்தனர். இதற்காக தனது தந்தையின் உதவியுடன் தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு பழைய சுசுகி பைக்கை ரூ.25 ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கி அதில் இரண்டு லித்தியம் பேட்டரிகள் பொருத்தப்பட்டு, டைனமோ முறையில் இருசக்கர வாகனம் இயங்கிக் கொண்டிருக்கும்போது பேட்டரிகளுக்கு சார்ஜ் செய்யும் முறையை கண்டுபிடித்தனர்.
இரண்டு பேட்டரிகள் பொருத்தப்பட்டு இருப்பதால் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்லும்போது ஒரு பேட்டரி 70% சார்ஜ் தீர்ந்து போகும் நேரத்தில் மற்றொரு பேட்டரியில் 100% சார்ஜ் முழுமையாக இருக்கும் எனவும் சுழற்சி முறையில் பேட்டரிகள் தனக்குத் தானே சார்ஜ் செய்து கொள்வதால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இயக்கிக் கொள்ளலாம் என தெரிவித்தனர். மேலும் பேட்டரிகள் மூலம் இயங்கும் இருசக்கர வாகனத்தை கடந்த மூன்று மாதங்களாக கண்டுபிடித்ததாகவும் இதற்காக ஒரு லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு பொருளாதார உதவி செய்தால் இதன் செலவுகளை மேலும் குறைத்து பொதுமக்கள் பயன்படுத்த முடியும் என தெரிவித்தனர். இந்த வாகனங்களை உபயோகிப்பதால் பொதுமக்களுக்கு பெட்ரோல் மற்றும் மின்சார செலவுகள் குறையும் என அவர்கள் தெரிவித்தனர்.