வல்லக்கோட்டை கும்பாபிஷேக விழாவில் கோவில் விமான கலசம் புனித நீர் ஊற்றும் பகுதிக்கு, தமிழிசை சௌந்தரராஜன் அனுமதித்ததை அதிகாரிகளிடம் தான் கேட்க வேண்டும் - செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணியசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. 1200 ஆண்டுகள் பழமையான கோவில் என நம்பப்படுகிறது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது கோவில் விமான கலசம் புனித நீர் ஊற்றும் பகுதிக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் முன்கூட்டியே சென்றுவிட்டார். தாமதமாக வந்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை, காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
செல்வப்பெருந்தகை பரபரப்பு புகார்
கும்பாபிஷேக விழா முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், குடமுழுக்கு விழா சிறப்பாக நடந்தது. அதிகாரிகளைப் பொறுத்தவரை மிகவும் மெத்தன போக்கை கடைபிடித்து வருகின்றனர். யார் யாரை கட்டுப்படுத்துவது என்பதே தெரியவில்லை. பாதுகாப்பில்லாத நிலையில் தான் குடமுழுக்கு விழா நடந்து முடிந்துள்ளது.
2000 ஆண்டுகள் பிரச்சனை ?
இதனை மிகவும் செம்மைப்படுத்தி செய்திருக்கலாம். 2000 ஆண்டுகளாக இந்த பிரச்சனை இருந்து வருகிறது. அதிகாரிகள் முன் நின்று செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆகையால் மக்களோடு மக்களாக விழாவில் பங்கேற்று பார்த்து விட்டு வந்துள்ளேன். திமுக அரசுக்கும், அறநிலையத்துறைக்கும் கலங்கம் ஏற்படுத்தக் கூடாது என்பதால்தான் மக்களோடு மக்களாக பங்கேற்று இருந்தேன்.
அதிகாரிகள், அதிகாரிகளாக செயல்பட வேண்டும். தமிழிசை சௌந்தரராஜனுக்கு கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றும் பகுதிக்கு அனுமதி அளித்ததை அதிகாரிகளிடம் தான் கேட்க வேண்டும், எனக்கு தெரியவில்லை. ஒருவேளை தெலுங்கானா முன்னாள் ஆளுநருக்கு மரியாதை அளிக்க வேண்டும், சட்டமன்ற உறுப்பினரை பின்னாடி நிற்க வைக்கலாம் என அதிகாரிகள் எண்ணினார்களா? என சிரிப்புடன் பதில் கூறினார்.
கோவில் கும்பாபிஷேக விழாவில் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக செல்வப்பெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கும் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் கட்சிக் கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவரே இவ்வாறு குற்றச்சாட்டு முன் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. செல்வப்பெருந்தகை அப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.